புதுடெல்லி: சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நாடாளுமன்றத்தில் இன்று திமுக எம்பிக்கள் எழுப்பினர்.
மெட்ரோ ரயில் திட்டம்: திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்வியில் சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கும்படி கேட்டிருந்தார். மேலும், கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் நிலை குறித்தும் விளக்கம் அளிக்கும்படியும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
விமானக்கட்டணம் அதிகரிப்பு: மக்களவையில் இது தொடர்பான கேள்வி எழுப்பிய திமுக எம்பி தயாநிதி மாறன், "கடந்த ஆண்டு விமானக்கட்டணம் 40% அதிகரித்து இருந்தது என்று குறிப்பிட்டார். அதிக தேவை உள்ள காலங்களில் விமான பயணக்கட்டணத்துக்கு மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தன்னிச்சையாக பயணக்கட்டணத்தை உயர்த்துவதைத் தடுத்து வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக தனியார் விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தயாநிதி மாறன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை: நேரில் சென்று விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
நிலத்தடி நீர் மாசு: நாடு முழுவதும் நிலத்தடி நீரில் ஆர்சனிக், ஃப்ளூரைடு மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தினார். நிலத்தடி நீர் மாசுபாட்டினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வரை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரதமருக்கு கேள்வி: தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் எப்போது முடிக்கப்படும் என்று மக்களவையில் திமுக எம்பி அ.மணி கேள்வி எழுப்பினார். நாடு முழுவதும் கிராமப்புற பெண்கள், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் ராஜேஷ்குமார் கேட்டுக் கொண்டார்.
நாடு முழுவதும் செயல்பாட்டில் உள்ள அணுமின் திட்டங்கள் குறித்து திமுக எம்பி டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பினார். கடந்த 5 ஆண்டுகளில் அணுமின் திட்டங்களுக்கு ஏற்பட்ட செலவு மற்றும் அணு மின் திட்டத்தால் கிடைத்த வருவாய் உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் அளிக்கும் படி இந்த துறையின் அமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கேள்வி எழுப்பினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்