புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை வெளியேற்றும் பணியை அந் நாட்டு அரசு தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 104 பேருடன் அந் நாட்டு ராணுவ விமானம் நேற்று அமிர்தசரஸ் வந்தது.
ஹரியானாவை சேர்ந்த 33 பேர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த தலா மூன்று பேர், சண்டிகரை சேர்ந்த இருவர் என 104 பேர் நேற்று இந்தியா அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 19 பேர் பெண்கள், நான்கு வயது ஆண் குழந்தை , இரண்டு சிறுமிகள் உள்பட 13 பேர் சிறார்களும் அடங்குவர்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக டொனால்ட் டிரம்ப் அரசால் நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்கள் குழு இதுவாகும். நாடு கடத்தப்பட்டவர்கள் பயணம் முழுவதும் தங்கள் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே அவர்கள் விலங்கிடப்பட்டதாகவும் கூறினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றம் இன்று கூடியவுடன் இந்த விவகாரம் வெடித்தது. இந்தியர்கள் அவமானப்படுத்தப்பட்டதைக் கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், இவை அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் கலந்து கொண்ட வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்பியும், அக் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான பிரியங்கா காந்தி கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் மிகவும் நல்ல நண்பர்கள். இது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க மோடி ஏன் இதை நடக்க அனுமதித்தார்? அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர நமது விமானத்தை அனுப்பியிருக்க முடியாதா?
மக்களிடம் இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டுமா? அவர்கள் கைவிலங்குகள் மற்றும் சங்கிலிகளால் கட்டி திருப்பி அனுப்பியிருக்க வேண்டுமா? " என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் பதில் அளிக்க வேண்டுமா? என்று கேட்டதற்கு, "அவர் பதில் அளிக்க வேண்டும், பிரதமர் பதில் அளிக்க வேண்டும். " என்று அவர் கூறினார்.