தமிழ்நாடு

tamil nadu

சூரபத்மனை வதம் செய்த முருகபெருமான் - திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்!

By

Published : Nov 2, 2019, 10:09 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகன், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

thiruchendur

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கோயிலில் திரளான பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தனர். மேலும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வந்து விரதத்தை கடைப்பிடித்தனர். விழா நாட்களில் சுவாமிக்கு தினசரி அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

ஆறாம் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுவாமி ஜெயந்திநாதர், யானை முகம் கொண்ட தாரகாசுரன், சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன் முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார். தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி சுவாமி ஜெயந்திநாதர் தன் வாகனமாக ஆட்கொண்டார்.

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்!

இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மேலும் கோயில் வளாகத்தில் பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியை பார்க்க பெரிய டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இருந்து 3,200 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏழு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க கடலில் தடுப்பு வேலிகள் வைக்கப்பட்டு இருந்தன. நாளை இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை!

ABOUT THE AUTHOR

...view details