திருநெல்வேலி: மாநகர பகுதிகளில் மாடுகள் அதிக அளவு சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்தனர். குறிப்பாக மேலப்பாளையம் பகுதியில் அதிக இடங்களில் மாடுகள் சாலைகளில் சுற்றி திரிந்தன. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதையடுத்து மாடுகளை சாலையில் திரியவிட்டால் அவற்றை பிடித்து ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி சில தினங்களுக்கு முன்பு எச்சரித்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மேலப்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஏலம் விட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று பாளையங்கோட்டை சமாதான புரத்தில் வைத்து சாலைகளில் திரிந்து மாடுகளை பிடித்து ஏலம் விடும் பணி நடைபெற்றது.
அதே சமயம் மாநகராட்சியின் இந்த நடவடிக்கை மாட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கினர். ஏலம் நடைபெறும் இடத்திற்கு இந்த அமைப்புகள் கொடியுடன் வந்து வாக்குவாதம் செய்தனர். அப்போது தனது மாடு ஏலம் விடப்படுவதை கண்டித்து இளைஞர் சூர்யா என்பவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயன்றதால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் மாடு ஏலம் விடும் விவகாரத்தை நெல்லை மாவட்ட பாஜக கட்சியும் கையில் எடுத்தது. அதன்படி ஏலம் விடுவதற்காக பறிமுதல் செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த மாடுகளை நேற்று இரவு மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் தலைமையில் அக்கட்சியினர் அத்துமீறி பூட்டை உடைத்து அவிழ்த்து விட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது அங்கிருந்த அலுவலர்களை பாஜகவினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.