நெல்லை:தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வருவதை உறுதிசெய்யும் வகையில் EMIS ( Education management information system ) எனப்படும் செயலியில் பதிவு செய்யும் முறை தொடங்கியுள்ளது. இதுவரை எழுத்து வழியில் வருகைப்பதிவேற்ற நோட்டில் வருகை பதிவு செய்யப்பட்டு வந்தது.
இந்த பழைய முறையில் ஒரு ஆசிரியர் விடுப்பு எடுத்தால் அந்த தகவல் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தெரிவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். ஆனால், இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் செயலி பதிவேட்டு முறையினால் அன்றாட மாணவர்கள், ஆசிரியர்கள், வருகைப்பதிவை சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து உறுதிசெய்து கொள்ள முடியும்.
இந்த வருகைப்பதிவேட்டு முறையை டிஜிட்டல் மயமாக மாற்றும் பணி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் கடந்த ஆறு மாதங்களாக செயல்முறையில் முன்னோட்டமாக நடைபெற்றது. இன்று முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப்பதிவேடு எழுத்தில் பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, முழுமையாக டிஜிட்டல் மயமாகும் பணியானது செயலி மூலமாகத் தொடங்கியுள்ளது என அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.