கரோனா ஊரடங்கால் கடந்த 10 மாதங்களாக தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. 2020-21ஆம் கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியிலும், சில பள்ளிகளில் வாட்ஸ்ஆப் மூலமும் ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தினர்.
பின்னர் கரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. இதனால் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் 2021 ஜனவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கின. அதனைத் தொடர்ந்தது பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் தொடங்கின. மேலும் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டன.