இது குறித்து சு. வெங்கடேசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா முன்களப் பணியாளர்களுக்கான 50 லட்சம் ரூபாய் காப்பீடு புதுப்பிக்கப்படாமல் உள்ளது. அத்திட்டம் நீட்டிக்கப்பட ஆவன செய்யுமாறு நேற்று (ஏப். 20) சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
இன்று (ஏப். 21) கரோனா முன்களப் பணியாளர்க்கான காப்பீட்டுத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிற வகையில் புதுப்பிக்கப்படுவதாக நல்ல செய்தி வந்துள்ளது.
இதற்கு மத்திய அமைச்சருக்கு நன்றி. ஆனால் இரண்டு கேள்விகள் எஞ்சி இருக்கின்றன. ஒன்று, இதற்கான காப்பீடு மார்ச் 24ஆம் தேதி முடிவடைந்துவிட்டது. அன்றைய நாள் நள்ளிரவு வரை உயிரிழந்தவர்களுக்கான காப்பீட்டிற்கான விண்ணப்பம், ஆவணங்கள் 24ஆம் தேதிக்குள்ளாக வரப்பெற்று உரிமம் பட்டுவாடா செய்யப்படும். இதுவே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் தெரிவிப்பது.
ஆனால், அமைச்சகத்தின் ட்விட்டர் செய்தி ஏப்ரல் 24ஆம் தேதி வரை இத்திட்டத்தின்கீழ் நீட்டிக்கப்பட்டிருப்பது போன்ற பொருள் தருகிறது. ஆனால், அதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளனவா, காப்பீட்டு நிறுவனத்தின் இசைவு பெறப்பட்டுள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.