இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரஹானே. முன்னதாக இந்திய ஒருநாள் அணியிலும் இடம்பிடித்திருந்த அவர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க தொடருக்குப்பின் மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பெறாமல் உள்ளார்.
ரஹானே, சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனிடையே, பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ரஹானே, உலகக்கோப்பை அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதபோது தனது மனநிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
"நான் தொடர்ச்சியாக வெற்றிபெற்றாலும் ஒரு இடத்தில் நிறுத்தப்படுவோம். அந்தச் சமயத்தில் நாம் அமைதியாக அமர்ந்து நமது தவறுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். நானும் உலகக்கோப்பை அணியில் தேர்வாகாதபோது அதைத்தான் செய்தேன்.
அச்சமயத்தில் பல நேரங்களில் பூங்காக்களில் நடைபயிற்சி செய்வேன். மேலும் சில சமயங்களில் அமைதியாக அமர்ந்து எனது சிறு வயது நாள்களை நினைத்துப் பார்ப்பேன். அதிலிருந்து பதில்களைத் தேடி கண்டுபிடித்தேன்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறேன். இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாடியபோது பலவற்றைக் கற்றுக்கொண்டேன். கிரிக்கெட்டில் மட்டுமல்ல மனிதனாகவும் பலவற்றைக் கற்றுக்கொண்டுள்ளேன்.
இந்த இரண்டு மாதங்களில் ஏழு போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளேன். களத்தில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியேயும் பலவற்றைக் கற்றுவருகிறேன்.
கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. அதில் எப்போதும் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நிச்சயம் ஒருநாள் அணிக்குள் மீண்டும் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: பிலாண்டர் வேகத்தில் சிதைந்த இங்கிலாந்து 181 ரன்களுக்கு ஆல்-அவுட்