விருதுநகர்:விருதுநகர் கத்தாளம்பட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன். 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கு துலுக்கப்பட்டியில் வீட்டுமனை உள்ளது. இப்பகுதியில் வீடு கட்ட வரைபட அனுமதி கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
வீடு வரைபட அனுமதி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. ஊராட்சி மன்றத் தலைவர் கைது!
Published : Jul 27, 2024, 5:05 PM IST
இதனால் துலுக்கப்பட்டி ஊராட்சித் தலைவர் நாகராஜனை மணிமாறன் அணுகியுள்ளார். ஆனால், நாகராஜன் வீடு கட்ட வரைபட அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டு, ரூ.5 ஆயிரத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிமாறன், இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, போலீசார் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மணிமாறனிடம் வழங்கியுள்ளனர். தொடர்ந்து மணிமாறன், ஊராட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து ரூ.5 ஆயிரத்தை வழங்கியுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகராஜனை பிடித்தனர். மேலும், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.