திருவண்ணாமலை ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம் - Sri Draupadi Amman Temple - SRI DRAUPADI AMMAN TEMPLE
Published : Apr 21, 2024, 8:02 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயிலில் 211ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று (சனிக்கிழமை) வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருவண்ணாமலை, மங்கலம் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 1-ஆம் தேதி மகாபாரத அக்னி வசந்த பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களும் நடைபெற்றது.
இதனையடுத்து தினந்தோறும் அர்ச்சுனன் தபசு, அம்மன் பாஞ்சாலி தேவி திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, பாண்டவர் அரக்கு மாளிகை, சுபத்திரை திருக்கல்யாணம், கண்ணன் தூது, அரவான் கடபலி, அபிமன்னன் சண்டை உள்ளிட்ட பல்வேறு இதிகாச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் காப்பு கட்டி விரதமிருந்த, தீமிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் தர்மகத்தா பெருமாள், விழாக்குழு தலைவர் தங்கராஜ், உறுப்பினர்கள் செய்திருந்தனர். இதில் மங்கலம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.