Published : Jun 29, 2024, 7:28 PM IST
தஞ்சாவூரில் மோப்ப நாய் சீசர் உயிரிழப்பு.. துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் அஞ்சலி! - POLICE Sniffer DOG DIED
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் சீசர் என்ற 10 வயதுடைய மோப்பநாய் இருந்தது. கடந்த 2015 மார்ச் 10ஆம் தேதி அன்று காவல்துறை பணியில் சேர்க்கப்பட்ட சீசர், வெடிகுண்டுகளைக் கண்டறியும் பிரிவில் நிபுணத்துவம் பெற்றது.
தமிழகத்தில் பிரதமர், ஆளுநர், முதல்வர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் வருகையின் போது அவர்கள் செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் அப்பகுதியில் நடைபெறும் மேடை நிகழ்வுகளில் வெடிகுண்டுகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா எனக் கண்டறிவதற்காக மோப்பம் பிடிக்கும் பணியில் சீசர் ஈடுபடுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக சீசருக்கு கடந்த 27ஆம் தேதி அன்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு சீசரை போலீசார் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது, சீசர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, நேற்று மாலை தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை மோப்பநாய் பிரிவு அலுவலகம் அருகில் சீசரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத், துணைக் கண்காணிப்பாளர்கள் ராஜா, நித்யா, கிருஷ்ணன் ஆகியோர் சீசரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் 3 ரவுண்டுகள் துப்பாக்கி குண்டுகள் முழங்க சீசருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது