கோவையில் ஜெகநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. இஸ்கான் அமைப்புடன் மதநல்லிணக்க திருவிழா! - Jagannath temple car festival
Published : Jul 13, 2024, 8:11 PM IST
கோயம்புத்தூர்: கோவையில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாதர் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதில் கிருஷ்ணர் பக்தர்கள் படை சூழ 'ஹரே ராம ஹரே கிருஷ்ணா' என்ற பஜனை பாடலை பாடியவாறு தேர் திருவிழா நடைபெற்றது.
தேரில் ஜெகன்நாதர், பலதேவர், சுபத்ரா தேவி ஆகியோரின் மூல விக்கிரகங்களுடன் பிரமாண்ட தேர் பவனி வந்தது. ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுடர் வீதி வழியாக மீண்டும் தேர் நிலையை அடைந்தது. மூல விக்கிரகங்களே தேரில் வலம் வரும் ஒரே திருவிழா இதுவாகும். தேர் பவனி வரும்போது, சிறப்பு பஜனை, ஹரி நாம சங்கீர்த்தனம், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேர் நிலையை அடைந்ததும், மூல விக்கிரகங்கள் மீண்டும் ஜெகன்நாதர் கோயிலில் வைக்கப்பட்டது.
தேரோட்டத்தின் போது ஒப்பணக்கார வீதி பகுதியில் அமைந்துள்ள அத்தர் ஜாமத் பள்ளி வாசல் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்கான் அமைப்பினர் மரியாதை நிமித்தமாக சந்தித்துக் கொண்டு மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தினர். இஸ்கான் கோயில் நிர்வாகிகளும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் கை கொடுத்தும், சால்வை அணிவித்தும் மரியாதை செய்தனர். அதேபோன்று அத்தார் ஜமாத் நிர்வாகிகளும் இஸ்கான் நிர்வாகிகளுக்கு சால்வையும், கல்கண்டு பேரிச்சம் பழத்தை வழங்கினார்கள்.