தண்ணீ கேனை 'அலேக்'காக தூக்கிய யானை! விரட்ட வந்த வனத்துறையினர் வாகனத்தைத் தாக்கியதால் பரபரப்பு! - VELLIANGIRI VILLAGE ELEPHANT ENTERS
Published : Feb 24, 2025, 2:01 PM IST
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் பூண்டி கிராமம் வெள்ளியங்கிரியில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் அவ்வப்போது உணவு தேடி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் வளாகத்தில் முகாமிடுகின்றன.
மேலும் அவ்வாறு முகாமிடும் யானைகள் பூஜை சாமான் கடைகள், அன்னதானக் கூடம் போன்றவற்றிற்குள் புகுந்து கிடைக்கும் உணவை உண்டு செல்வது அடிக்கடி நிகழ்கிறது. இந்த நிலையில், நேற்றிரவு (பிப்ரவரி 23) மீண்டும் வெள்ளிங்கிரி அடிவார உணவு கூடத்திற்குள் புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த தண்ணீர் கேனை எடுத்துச் சென்றது.
பின், சில மணி நேரம் உணவுக்கூடம் அருகே யானை உலா வந்து கொண்டிருந்ததால் மலையேற்றத்திற்குச் சென்ற பக்தர்கள் அச்சமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின், அங்கு வாகனத்தில் ஒலி எழுப்பி ஒற்றை யானையைக் காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.
அப்போது சில மீட்டர் தூரம் வேகமாக ஓடிய யானை திடீரென திரும்பி நின்று, வனத்துறை வாகனத்தையும் முட்டியது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பக்தர்கள் அதிகளவில் வெள்ளியங்கிரி கோயிலுக்கு வரும் காலம் என்பதால், காட்டுயானைகளை வனப்பகுதிக்குள்ளேயே கட்டுப்படுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.