நெல்லையில் தாய் கண் முன்பே மகனை தாக்கிய குரங்கு.. சிசிடிவி காட்சிகள் வைரல்! - Nellai Monkey attack videos
Published : May 21, 2024, 5:32 PM IST
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பாபநாசம் அடுத்த சிவந்திபுரம் பகுதிகளில் கடந்த சில நாட்களில் சுமார் 5 பேரை குரங்குகள் தாக்கி உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து நேற்று 13 வயதுடைய முத்துராமன் என்ற சிறுவனை குரங்கு தாக்கியுள்ளது. முன்னதாக, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் 2 குரங்குகளைப் பிடித்த நிலையில், தொடர்ந்து சிறப்பு குழு அமைத்து குரங்குகளை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதே சிவந்திபுரம் கஸ்பா பகுதியைச் சேர்ந்த பூசன் என்பவரின் மகன் பேச்சிமுத்து, தனது தாய் மற்றும் சகோதரருடன் அப்பகுதியில் நடந்து சென்றபோது, அங்கிருந்த வெள்ளை மந்தி குரங்கு ஒன்று பேச்சிமுத்து மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதில் பேச்சிமுத்துக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக அவரை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிறுவனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தொடர்ந்து, சிவந்திபுரம் பகுதியில் தொடர்ச்சியாக குரங்குகள் பொதுமக்களை தாக்கி வரும் நிலையில், அப்பகுதியில் சுற்றித் திரியும் அனைத்து குரங்குகளையும் பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், இன்று பேச்சிமுத்துவை வெள்ளை மந்தி திடீரென பாய்ந்து தாக்கும் சம்பவமானது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.