“ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஒன்னா சேருணும்” - வேலூர் வெங்கடேச பெருமாளிடம் வேண்டிய அதிமுகவினர்!
Published : 3 hours ago
வேலூர்: நடிகரும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடங்கிய அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK) இன்று 53 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. 52 ஆண்டுகளை கடந்த அதிமுக கட்சி, இந்த தருணத்திலாவது மீண்டு எழ வேண்டும் என்று அதிமுகவின் தொண்டர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதிமுகவின் 53 ஆவது ஆண்டு விழாவை அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக கழகச் செயலாளரும் ஓ. பன்னீர் செல்வம் அணி வழக்கறிஞர் கோதண்டம், மீனூர் கிராமத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து அப்பகுதி மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் இரண்டாவது திருப்பதி என்று கூறப்படும் மீனூர் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஓ பன்னீர் செல்வம் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றாய் இணைய வேண்டும் என்று சிறப்பு வேண்டுதல் மற்றும் பிரார்த்தனை செய்தனர். இதில் மாவட்ட கழக இணைச்செயலாளர் தேவிகா மற்றும் பொருளாளர் ஜெயகுமார், வேலூர் புறநகர் மாவட்ட ஓ.பி.எஸ். அணியினர் பலர் கலந்துகொண்டனர்.