ரயில்கள் தொடர்பான அனைத்து வேலைகளையும் சுலபமாக்கி வந்த ஐ.ஆர்.சி.டி.சி செயலிக்கு இனி வேலை கிடையாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘சுவா-ரயில்’ (SwaRail), எனும் புத்தம் புதிய சூப்பர் செயலியை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது தான் இதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த செயலியை தேசிய ரயில்வே தகவலமைப்பு மையம் (CRIS - Centre for Railways Information Systems) உருவாக்கி வெளியிட்டுள்ளது.
‘சுவா-ரயில்’ சூப்பர் செயலியில் முன்பதிவு பயணச்சீட்டு, முன்பதிவில்லா பயணச்சீட்டு, ரயில் நிலையம் உள்நுழைவு நடைமேடை டிக்கெட், பார்சல் தொடர்பான தகவல்கள், ரயில் நேரம் மற்றும் முன்பதிவு தொடர்பான தகவல்கள், உணவு முன்பதிவு, புகார்கள் (Rail Madad) என அனைத்தையும் மேற்கொள்ள முடியும்.
தற்போது, சோதனைக்காக பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த செயலி வழங்கப்படுகிறது. இதில் இருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து ரயில்வேயின் சூப்பர் செயலி புதுப்பிக்கப்படும். இதனையடுத்து, அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் இது வெளியிடப்படும். கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய தளங்களில் இருந்து ஆண்ட்ராய்டு, ஐபோன் பயனர்கள் ‘சுவா-ரயில்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சுவா-ரயில் சூப்பர் செயலியின் சிறப்பம்சங்கள் என்ன?
ஒரு லாகின் போதும்: பயனர்கள் இனி சுவா-ரயில் சூப்பர் செயலியில் மட்டும் பதிவு செய்து லாகின் தகவல்களை பெற்றால் போதும். அந்த பயனர் பெயர் (User name) மற்றும் கடவுச்சொல்லை (Password) மட்டும் வைத்துக்கொண்டு ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC), ரயில் கனெக்ட் (RailConnect), யூடிஎஸ் மொபைல் ஆப் (UTS Mobile App) மற்றும் ரயில் சேவைகள் தொடர்பான பிற தளங்களை அணுக முடியும்.
அனைத்தும் ஒரு செயலியில்: தற்போதைய சூழலில், ரயிலில் அனைத்து சேவைகளையும் பயன்படுத்த பல தளங்கள் அல்லது செயலிகளை பயன்படுத்த வேண்டியது இருக்கும். இனிமுதல் முன்பதிவு பயணச்சீட்டு, முன்பதிவில்லா பயணச்சீட்டு (Unreserved tickets), நடைமேடை நுழைவுச்சீட்டு (Platform ticket), பார்சல் தொடர்பான தகவல்கள், ரயில் நேரம் மற்றும் முன்பதிவு தொடர்பான தகவல்கள், உணவு முன்பதிவு, புகார்கள் என இன்னபிற ரயில் சேவைகளை இந்த சூப்பர் செயலியின் வாயிலாக நிகழ்த்தலாம்.