சேலம்: சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி கிராமப் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சேலம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி நேற்று முன்தினம் (ஏப்.14) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பொழுது பொதுமக்கள் மத்தியில், திமுக அரசின் சாதனைகளைக் கூறியும், மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்தும் அவர் வாக்கு சேகரித்தார். அப்பொழுது அந்த கூட்டத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் வயல்வெளியில் சுற்றித் திரிந்த பாம்பு ஒன்றைப் பிடித்து கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டு வந்தார்.
மேலும் தனது, இரண்டு கைகளிலும் பாம்பைப் பிடித்து விளையாடிக் கொண்டு பிரச்சாரம் நடந்த பகுதியில் சுற்றித்திரிந்தார் அந்த இளைஞர். இதனைக் கண்ட அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். உடனே அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த இளைஞரை எச்சரிக்கை செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
ஆனால், அந்த இளைஞர் பிரச்சாரம் முடியும் வரை அந்த பகுதியிலேயே சுற்றிச் சுற்றி வந்தார். திமுக வேட்பாளர் செல்வகணபதி தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பிறகுதான் இளைஞரும் அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளார்.