தமிழ்நாடு

tamil nadu

தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அவதூறாக பேசியதாக கூறி பெண் தற்கொலை.. திருவண்ணாமலையில் பரபரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 1:39 PM IST

Tiruvannamalai Crime: திருவண்ணாமலையில் கடன் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், அவதூறு வார்த்தைகளால் பேசியதால், மன உளைச்சலடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தற்கொலை
அவதூறு பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த, கரிமலைப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பத்மா. இவரது கணவர் வேலாயுதம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்தில் இறந்துள்ளார். கூலி தொழில் செய்து வரும் இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், பத்மா தனது மகள் திருமண செலவிற்காகவும், மகன் படிப்பு செலவிற்காகவும் தனியார் நிறுவனத்தில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மாதந்தோறும் கட்டப்பட்டு வந்த தவணை ஒரு சில மாதங்களாக தவறியதால், கடந்த 21 ஆம் தேதி, பத்மாவின் வீட்டிற்கு இரு நிதி நிறுவனங்களைச் சார்ந்த ஊழியர்கள் வருகை புரிந்துள்ளனர். அவர்கள் பத்மாவிடம் முறையாக தவணை செலுத்தும் படி வலியுறுத்தியதோடு, அவதூறு வார்த்தைகளால் பேசியுள்ளனர். மேலும், பத்மா வைத்திருந்த கைபேசியை பிடுங்கி சென்றுள்ளனர்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகிய பத்மா, தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பத்மா நேற்று (பிப்.25) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, மேல் செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், அவதூறு வார்த்தைகளால் பேசியதால், மன உளைச்சலடைந்த பெண் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதால் அவரது குடும்பம் இன்று தாய், தந்தை என இருவரையும் இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ளது. எனவே, இதற்கு காரணமாக இருந்த தனியார் நிதி நிறுவனம் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்கொலை தடுப்பு உதவி மையம்

நிதி நிறுவனங்களால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்படுவதால் அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த பத்மாவில் குடும்பத்திற்கு இழப்பீடு வேண்டியும் உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:தென்காசி அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு: 2 ரயில்களை காப்பாற்றிய முதியவருக்கு குவியும் பாராட்டுகள்..

ABOUT THE AUTHOR

...view details