தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 3:41 PM IST

ETV Bharat / state

4 ஆயிரத்தைக் கடந்த காற்றாலை மின் உற்பத்தி.. இதுதான் காரணமா? - வெளியான தகவல்! - Wind Energy Increase

Wind Energy Increase in Tamilnadu: நெல்லை உட்பட தென் மாவட்டத்தில் 3 நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ள காரணத்தால், இந்த சீசனில் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை புகைப்படம்
காற்றாலை புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. மேலும், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரீமால் புயலாக உருமாறி, கரையைக் கடந்த போது பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று வீசத் துவங்கியது.

முன்னதாக, தமிழ்நாட்டில் பெய்த தொடர் மழையால் காற்றாலை மின் உற்பத்தி சீராக நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது கடந்த இரு நாட்களாகவே காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், காற்றின் வேகம் அதிகரித்ததால் தமிழ்நாட்டில் நேற்று ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தி 4,111 மெகாவாட்டை எட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் மின் தேவையில் காற்றாலை மின் உற்பத்தி மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் நாள் ஒன்றிற்கு 21 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக மின் தேவை உள்ள என்ற நிலையில், சீசன் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுக்கிறது. அதாவது, தமிழ்நாட்டில் மே மாதம் முதல் அக்டோபர் வரை காற்று சீசன். இந்த காலகட்டத்தில் 5 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

அதற்காக 13 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. அதில், தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த மே மாதம் காற்றாலை சீசன் துவங்கி நாள் ஒன்றிற்கு 1,000 மெகாவாட்டிற்கும் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்த காரணத்தினால், மின்னணு உற்பத்தி அடியோடு சரிந்து 100 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டது.

தற்போது, தென்மேற்கு காற்று பலமாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. அதில், நேற்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தி 4 ஆயிரத்து 111 மெகாவாட்டை எட்டியுள்ளது. இது இந்த சீசனில் அதிகபட்ச மின் உற்பத்தி ஆகும்.

அதுமட்டுமின்றி, காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக பல்வேறு இடங்களில் மின் தட்டுப்பாடு தவிர்க்கப்படுகிறது. இனி ஜூன், ஜூலை மாதங்களில் காற்றாலை மின்சார உற்பத்தி 5 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, கூடங்குளம் 2வது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கக் கூடிய 562 மெகாவாட் மின்னுற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜூன் 1ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்.. 'இந்தியா கூட்டணி' புதிய வியூகம்!

ABOUT THE AUTHOR

...view details