தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தாதது ஏன்?அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி!

நீதிமன்ற உத்தரவின்படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று தமிழக அரசின் மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

இ-பாஸ், சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்
இ-பாஸ், சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம் (Credit - ETV Bharat Tamilnadu)

சென்னை:சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த இ – பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம் என்ன மாதிரியான வாகனம்? எத்தனை பேர் வருகின்றனர்?
ஒரு நாள் சுற்றுலாவா? அல்லது தொடர்ந்து தங்குவார்களா? என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் எனவும் இரு மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் சதிஷ்குமார், பரதசக்கரவர்த்தி அமர்வு, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

இபாஸ் தொடர்பாக எந்த சோதனை செய்யப்படுவதில்லை என குறிப்பிட்ட நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவுகள் காகிதத்தில் மட்டுமே இருப்பதாக தெரிவித்தனர். அப்போது அரசு தரப்பில், மலைவாழ் ஸ்தலங்களில் இ பாஸ் நடைமுறை முறையாகப் பின்பற்ற தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:" 'கூலி லிப்' சாப்பிட்டால் இளமையாக இருக்கலா?" - விளம்பரம் குறித்து நீதிமன்றம் கடும் அதிருப்தி!

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என்றும் இபாஸ் நடைமுறையாக அமல்படுத்துவது தரமான சுற்றுலாவிற்கு வழிவகுக்கும் என தெரிவித்து நீதிமன்ற உத்தரவின் படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல இபாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தியது குறித்து நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், இ-பாஸ் பெற விண்ணபிக்கும் நபர்களிடம் எப்போது வருகிறார்கள்? எங்கு தங்க இருக்கிறார்கள்? எத்தனை நாட்கள் தங்குவார்கள்? என்ற விவரங்களைக் கண்டிப்பாகப் பெற வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details