தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 10:30 PM IST

Updated : May 31, 2024, 5:27 PM IST

ETV Bharat / state

அக்னிபான் சோதனை எதற்கு? அடுத்த இலக்கு இதுவா? சென்னை ஐஐடியின் பிரத்யேக தகவல்கள்! - Agnibaan Sorted launch

100 kg satellites in 3D printed rocket: சென்னையில் உள்ள 'அக்னிகுல்' ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் 3d பிரிண்டிங் மூலம் தயாரிக்கப்படவுள்ள ராக்கெட் மூலம் 100 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3டி ராக்கெட், எஸ்.ஆர்.சக்ரவர்த்தி புகைப்படம்
3டி ராக்கெட், எஸ்.ஆர்.சக்ரவர்த்தி புகைப்படம் (Photo credits - ETV Bharat Tamil Nadu, Agnikul cosmos X page)

சென்னை: சென்னை ஐஐடி மாணவர்களால் துவங்கப்பட்ட 'அக்னிகுல்' ஸ்டார்ட் அப் நிறுவனம், 3டி பிரிண்டிங் முறையில் தயாரிக்கப்பட்ட 'அக்னிபான்' என்னும் ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவி இன்று (மே 30) வெற்றிகரமாக பரிசோதனையை மேற்கொண்டது.

அக்னிபான் சோதனை குறித்த பிரத்யேக தகவல்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

'அக்னிபான்' ராக்கெட் குறித்து சென்னை ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் எஸ்.ஆர்.சக்ரவர்த்தி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “இன்று விண்ணில் ஏவப்பட்டு பரிசோதித்க்கப்பட்ட அக்னிபான் ராக்கெட்டானது, 3டி பிரிண்டிங் முறையில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட செமி கிரியோஜெனிக் ராக்கெட் ஆகும்.

அக்னிபான் படைத்துள்ள சாதனைகள்: 3டி பிரிண்டிங் மூலம் செய்யப்பட்ட இயந்திரம் என உலக அளவில் சாதனை படைத்துள்ள இந்த அக்னிபான் ராக்கெட்டில், முதல் முறையாக செமிக்கிரியோ இயந்திரம் பயன்படுத்தப்பட்டு, இந்திய அளவிலும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு தனியார் நிறுவனமும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் வாகனத்தை ஏவியது இல்லை, அந்தச் சிறப்பையும் இந்நிறுவனம் அடைந்துள்ளது. இது மூன்றும் எங்களுக்கு மிகப்பெரிய சாதனையாகும்.

சென்னை ஐஐடியில் உள்ள என்.சி.சி.ஆர்.டி மையத்தில் இதன் ஆரம்பகட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து கரோனா தொற்று ஏற்பட்ட காலத்திற்குப் பின், தையூரில் புதிதாக அமைக்கப்பட்ட வளாகத்தில் இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அண்மையில், சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி நிறுவனத்தில் 3டி பிரிண்டிங் ராக்கெட் நிறுவனம் ஒன்று துவக்கி ராக்கெட் தயார் செய்து வருகிறோம். கடந்த 7 ஆண்டுகளாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

அக்னிகுல் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்: செயற்கைக்கோளை ஏவ தேவையான ராக்கெட்டை உருவாக்குவதற்குரிய காலத்தினை குறைப்பதே அக்னிகுல் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாகும். ஒரு ராக்கெட்டை செய்வதற்கு அதிக நாட்கள் தேவைப்படும், அவ்வாறூ நாட்கள் அதிகரிக்கையில், அதற்கான செலவுகளும் அதிகமாகும்.

3டி பிரிண்டர் மூலம் ஒரு இன்ஜினை மூன்று நாட்களில் செய்ய முடியும், ஒரு 3டி பிரிண்டரில் 2 இன்ஜின்களை தயாரிக்கலாம். 8 இன்ஜினை ஒரு வாரத்திற்குள் தயாரித்துவிட முடியும், அடுத்த ஒரு வாரத்திற்குள் அதனை பொருத்திவிட்டால், இரண்டு வாரத்திற்குள் விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டை நம்மால் உருவாக்க முடியும். இந்த நோக்கத்துடன் தான் இப்பணியைச் செய்து வருகிறோம், ஆனால், இதனை அடைவதற்கு இன்னும் ஓராண்டு ஆகும்.

இன்று விண்ணில் செலுத்தப்பட்டது விண்வெளிக்குச் செல்லாத, சப் ஆர்பிட்டல் ராக்கெட் ஆகும். அடுத்ததாக விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டை தயாரிக்க உள்ளோம். ஆனால், இதனை செய்வதற்கு பல கட்டங்கள் உள்ளன. இதனையும் தயார் செய்து பரிசோதனை செய்ய உள்ளோம். விண்வெளிக்குச் செல்லும் 3டி ராக்கெட்டை உருவாக்குவதற்கான பணிகளை படிப்படியாக மேற்கொண்டால், 2 ஆண்டுகளுக்குள் வெற்றிகரமாக முடிக்க முடியும் என நம்புகிறோம்.

இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை எதற்காக? ஒரு இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த சப் ஆர்பிட்டல் ராக்கெட்டானது ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று பரிசோதிக்கப்பட்டது. ஒரு இன்ஜின் பயன்படுத்தினால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதையும், எவ்வளவு கட்டுப்படுத்த முடியும் என்பதையும் தெரிந்துகொள்ள இன்றைய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில் எந்த கோணத்தில் செல்ல வேண்டுமென திட்டமிட்டோமோ, அந்த கோணத்தில் 65 வினாடியில் எரிபொருளை ஏரித்து படிப்படியாக மேல் நோக்கி சென்று, பின்னர் அங்கிருந்து வங்கக் கடலில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் படி வந்து கீழே விழுந்தது, அதன் குறிக்கோளை நாங்கள் எதிர்பார்த்தபடி செயல்படுத்தியது.

அடுத்ததாக விண்வெளிக்குச் செல்லக்கூடிய ராக்கெட்டை 3டி பிரிண்டில் தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கும். முதல் நிலையாக உலக அளவில் நவீன தொழில்நுட்பமான எலக்ட்ரிக் பம்ப்ஃபெட் எஞ்சினை தயாரிக்க உள்ளோம். இதனை வெளிநாடுகளில் ஒரு சில நிறுவனங்கள் ஓரிரு முறை பயன்படுத்தி உள்ளன. ஆனால், இந்தியாவில் இதனை முதல் முறையாக தயாரிக்க உள்ளோம்.

இதற்கான கிரவுண்ட் டெஸ்ட் பணிகள் செய்ய வேண்டி உள்ளது. இதற்குரிய மோட்டார் பம்ப் போன்றவற்றை பரிசோதனை செய்துள்ளோம். அடுத்ததாக எப்படி எரிபொருளை பம்பு மூலமாக இன்ஜினுக்கு அனுப்பி எரிய வைக்க வேண்டும் என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்.

முதல் நிலையில் 7 இன்ஜின்களை ஒன்றாக இணைத்து கட்டி 'கிளஸ்டர் டெஸ்ட்' செய்ய வேண்டும். மூன்றாவதாக, முதல் மற்றும் இரண்டாவது நிலையில் உள்ள இன்ஜின்கள் பிரிந்து செல்வதை பரிசோதனை செய்வோம். அதன் பின்னர், மூன்றையும் ஒன்றாக இணைத்து விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டை தயார் செய்து ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவ முடியும்.

ராக்கெட்டின் எடையைக் குறைக்க நடவடிக்கை: ராக்கெட்டை விண்ணிற்கு அனுப்பும் இந்த பிராஜெக்ட்டை ஓராண்டிற்குள் செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாங்கள் செய்யும் இந்த ராக்கெட்டின் மூலம் 100 கிலோ எடைக்கும் குறைவாக உள்ள செயற்கைக் கோள்களை விண்ணிற்கு அனுப்ப முடியும். எடை கூடுவதற்கு ஏற்ப கூடுதலாக இயந்திரங்களை இணைக்க வேண்டும், அதற்கு மேலும் காலம் ஆகும்.

முதலில் 100 கிலோ செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் ராக்கெட் தயார் செய்து விண்ணில் செலுத்துவோம். இதையடுத்து, சிறிய ரக செயற்கைக்கோள்களை அடிக்கடி விண்ணில் ஏவுவதற்குரிய திறனை ஏற்படுத்தவே திட்டமிட்டுள்ளோம். படிப்படியாக எடையை அதிகரித்து ராக்கெட் ஏவுவதற்கான திறனை வளர்த்துக் கொள்ளலாம்.

தற்பொழுது 500 முதல் 600 கிலோ மீட்டர் தொலைவில் இயக்க முடியும். ஆனால், ராக்கெட்டில் எடை குறைவாக இருந்தால் அதிக உயரத்திற்கு அனுப்ப முடியும். 100 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை 500 முதல் 600 கிலோ மீட்டர் உயரத்திற்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உடற்கூறியலில் நவீன எம்பார்மிங் முறை... தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை! - Embalming System

Last Updated : May 31, 2024, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details