தமிழ்நாடு

tamil nadu

யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? - கவுன்சிலர் முதல் பி.எஸ்.பி மாநிலத் தலைவர் வரை கடந்து வந்த பாதை! - K armstrong murder

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 3:38 PM IST

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டது சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை செய்யப்பட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேதபரிசோதனைக்கு பின்னர் அக்கட்சியின் பெரம்பூர் அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது. யார் இந்த ஆர்ம்ஸ்ட்ராங் ? அவரின் வாழ்க்கைப்பயணம் என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.

ஆம்ஸ்ட்ராங்(கோப்புப் படம்)
ஆம்ஸ்ட்ராங்(கோப்புப் படம்) (Credits - BSP Tamil Nadu FB Account)

சென்னை: பெரம்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்டு, பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் வசித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங்கின் தந்தை, தீவிர பெரியார் சிந்தனை மற்றும் திராவிடர் கழக ஆதரவாளர். பள்ளி காலத்தில் இருந்தே அரசியல் ஆர்வத்துடன் இருந்த ஆம்ஸ்ட்ராங் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து, வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2000-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கிய அவர், பூவை மூர்த்தியின் தலைமையை ஏற்று, புரட்சி பாரதம் என்ற கட்சியில் இணைந்தார்.

பூவை மூர்த்தி மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி 2006 ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை அப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து தொடங்கினார். பிறகு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 99வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று சென்னை மாமன்ற உறுப்பினர் ஆனார் ஆம்ஸ்ட்ராங். அதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த அவர், 2007-ம் ஆண்டு அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், 2007ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து திமுகவின் அப்போதைய தலைவர் கருணாநிதியின் உத்தரவுப்படி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 98 பேர் ராஜினாமா செய்த நிலையில், அப்போது கூட்டணியில் அங்கம் வகித்த பகுஜன் சமாஜ் கட்சியின் கவுன்சிலரான ஆம்ஸ்ட்ராங் ராஜினாமா செய்ய மறுத்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

2011 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று, அனைவரின் கவனத்தையும் பெற்றார். 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டார். 17 ஆண்டுகளாக தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்த அவர் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக நீண்ட காலமாக இருந்த ஆம்ஸ்ட்ராங், வடசென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சட்டப்படிப்பு படித்திருந்த இவர் ஆரம்ப காலத்தில் அடிதடி, மோதல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கினார். பின்னர், நீதிமன்றம் சென்று தன் மீதான அனைத்து வழக்குகளிலும் இருந்து விடுதலையானார்.

இருப்பினும் பழைய குற்ற வழக்குகளில் இவரால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வெவ்வேறு குழுக்களாக செயல்பட்டு அவரை பழிவாங்க காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆம்ஸ்ட்ராங் மிகவும் செல்வாக்கு மிக்கவராக வலம்வந்தார். அவரது ஆதரவாளர்கள் நிழல் போல் 24 மணி நேரமும் உடனிருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று இரவு தனது வீட்டின் முன்பாகவே, மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் ஆம்ஸ்ட்ராங். தலைநகர் சென்னையிலேயே ஒரு கட்சியின் மாநில தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் ஆம்ஸ்ட்ராங்கை ஆறு பேர் பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிவிட்டு உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டது. அங்கு வந்த போலீசார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர், இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். உயிரிழந்த ஆர்ம்ஸ்ட்ராங் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்து முடிக்கப்பட்டது.

இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போது 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதல் நிலை விசாரணைதான். விசாரணையை மேற்கொண்டு தீவிரப்படுத்தியதும் கொலை குறித்த முழுமையான காரணம் தெரியவரும். 10 தனிப்படைகளை அமைத்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொலையில் சில கூர்மையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையான தகவல் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூரில் உள்ள பள்ளி வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. நாளை காலை பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நேரில் மரியாதை செலுத்த உள்ளார்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத் தொடர்ந்து, அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சம்பவத்திற்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "மனைவியால் மன உளைச்சல்".. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details