தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை நீட் அகாடமி விவகாரம்; புகார் அளிக்காமலேயே நடவடிக்கை சாத்தியமானது எப்படி? சட்டம் கூறுவது என்ன?

நெல்லை நீட் அகாடமி விவகாரத்தில் புகார் அளிக்காமலேயே காவல்துறை நடவடிக்கை எடுத்தது எப்படி..? இதுகுறித்து சிறார் நீதி பாதுகாப்பு சட்டத்தின் அம்சங்கள் கூறுவது என்ன என்பதை விரிவாக விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

மாணவர்கள் தாக்கப்பட்ட காட்சி, நீட் குறித்த கோப்புப்படம்
மாணவர்கள் தாக்கப்பட்ட காட்சி, நீட் குறித்த கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

திருநெல்வேலி:நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், நீட் அகாடமிகளும் புற்றீசல் போல் அதிகரித்துள்ளன. ஆனால், இதுபோன்ற அகாடமிகளில் மாணவர்களுக்கு மனஅழுத்தம் கொடுப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், திருநெல்வேலியில் நீட் அகாடமி ஒன்றில் மாணவர்களை அகாடமி உரிமையாளர் மிக கொடூரமாக பிரம்பால் தாக்கும் சிசிடிவி காட்சி சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

அகாடமியில் நடந்த அத்துமீறல்: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் அகமத் என்பவர் நடத்தி வரும் ஜல் நீட் அகாடமியில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் அகாடமியில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அதை பார்த்து ஆத்திரத்தில் ஜலாலுதீன் அகமத் அவர்களை தாக்கியதும் அதேபோல் மாணவிகள் சிலர் செருப்புகளை சரியான இடத்தில் வைக்காத காரணத்தால் அந்த செருப்புகளை மாணவிகள் மீது தூக்கி வீசுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தது.

அதேசமயம் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களோ, அவர்களின் பெற்றோர்களோ வெளியில் சொல்லவில்லை. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் சுமார் 20 நாட்களுக்கு பிறகு அந்த அகாடமியில் வேலை பார்த்து வந்த முன்னாள் ஊழியர் அமீர் உசேன் என்பவர் வெளியிட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி நேரில் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில், மேலப்பாளையம் போலீசார் இது குறித்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஜலாலுதீன் அகமத்தை தேடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சமூகநலத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அகடமி விடுதியில் சோதனை நடத்தியதில், அந்த விடுதி அனுமதியில்லாமல் செயல்பட்டது தெரிய வந்ததால் தற்போது விடுதி மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளிக்காத பட்சத்தில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து, எங்கள் மகன்களை அடித்ததில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை தொடர்ந்து எங்கள் குழந்தைகள் அங்கே படிக்க வேண்டும் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறனர்.

ஆனால், பாதிக்கப்பட்ட மாணவர்ளில் இருவர் 18வயதுக்கு உட்பட்ட இளம் சிறார்கள் என கூறப்படுகிறது. எனவே இளஞ்சிறார் நீதி பாதுகாப்பு சட்டப்படி இதுபோன்ற விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ புகார் அளிக்காமலேயே மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகாரை வைத்து காவல் துறை நடவடிக்கை எடுக்க முடியும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நம்மிடம் கூறியிருந்தார்.

இதையும் படிங்க:ஈரோட்டில் கனமழையால் ரூ.80 லட்சம் மதிப்பிலான காலணிகள் சேதம்.. உரிமையாளர் வேதனை!

எனவே இளம் சிறார் நீதி பாதுகாப்பு சட்டத்தில் அப்படி என்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது? குழந்தைகளை பாதுகாக்க சட்டத்தில் என்னென்ன இடம் இருக்கிறது என்பது குறித்து ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்தின் சார்பில் சட்ட வல்லுநர்களிடமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடமும் விரிவான விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன.

புகார் அவசியமா?: அதன் விவரம் வருமாறு; வழக்கறிஞர் ரூபனிடம் கேட்டபோது, "சிறுவர் நீதி பாதுகாப்பு பராமரிப்பு சட்டம் 2015ன் படி குழந்தைகள் யார் கட்டுப்பாட்டில் அல்லது யார் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் குழந்தைகளை கொடுமைப்படுத்தினாலோ அல்லது துன்புறுத்தினாலோ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது அவர்களின் காவலர்கள் புகார் அளிக்க முன்வர விட்டாலும் கூட மேற்கண்ட இரண்டு அதிகாரிகளும் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம். அந்த புகாரின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்க இந்த சட்டத்தில் இடம் உள்ளது. உதாரணமாக குழந்தையை பெற்றோர்களே அடித்தால் யார் புகார் அளிப்பார்கள்.. அதற்காக பெற்றோர்கள் தானே, என்ன வேணாலும் செய்து கொள்ளலாம் என்று சொல்ல முடியாது. பெற்றோர்களே அடித்து துன்புறுத்தினால் கூட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அல்லது ஆட்சியர் புகார் அளிக்கலாம். யாருடைய கட்டுப்பாட்டில் அல்லது பொறுப்பில் குழந்தைகள் இருக்கிறார்களோ அந்த குழந்தைகளை அடித்தல், துன்புறுத்தல், அசிங்கப்படுத்துதல், கைவிடுதல், புறக்கணிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது" என்றார்.

யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்:இதுகுறித்து இந்த விவகாரத்தில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ள திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சியை ஈடிவி பாரத் சார்பில் பிரத்யேகமாக தொடர்பு கொண்டபோது, "பொதுவாக குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்து யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளோ அல்லது பெற்றோர்கள் மட்டும்தான் புகார் அளிக்க வேண்டும் என்று இல்லை. யார் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும், யாரும் புகார் அளிக்க முன்வராத பட்சத்தில், நாங்கள் புகார் அளிப்போம். அந்த வகையில், இந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையில் நாங்கள் அளித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேற்கொண்டு வேறு ஏதாவது குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருந்தால் எங்களிடம் தகவல் தரும் பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details