தமிழ்நாடு

tamil nadu

தமிழக அமைச்சரவையில் மாற்றம்? அமெரிக்கா புறப்படும் முன் முதல்வர் ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்! - Mk Stalin America trip

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 9:34 PM IST

அமெரிக்கா சென்று திரும்பியதும், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, மாற்றம் ஒன்றே மாறாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

முதல்வர் ஸ்டாலின் பேட்டி
முதல்வர் ஸ்டாலின் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக( இரவு 10 மணி அளவில்) அவர் அமெரிக்கா புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
தமது 17 நாட்கள் அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு க ஸ்டாலின் கூறுகையில்,,"அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டிற்காண தொழில் முதலீட்டுகளை ஈர்த்துவிட்டு வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி சென்னை வர திட்டமிட்டு இருக்கிறேன். முதலீடுகளை ஈர்ப்பதற்காக இதுபோன்ற பயன்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.

ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டதன் மூலம் தமிழ்நாட்டுக்கு பல முதலீடுகள் வந்துள்ளதன. மேலும் 18,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கக் கூடிய வகையில், 10 ஆயிரத்து 882 கோடி மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன.990 கோடிக்கான முதலீட்டு திட்டங்களில் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த
ஐ பி நிறுவனத்தின் திட்டத்தையும், ஓமராய் நிறுவனத்தின் திட்டத்தையும் தொடங்கி வைத்தேன் இந்த இரண்டு நிறுவனங்களின் திட்டத்தின் மூலம் 1538 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 3796 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களின் கட்டுமான பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் உள்ளன.

இதேபோல் ஜப்பான் நாட்டின் நிறுவனங்களை அமைக்க அடிக்கல் நாட்டி உள்ளேன். 3540 கோடி மதிப்புடைய மூன்று திட்டங்கள் முன்னேற்ற நிலைகளில் உள்ளன. 438 கோடி மதிப்பிலான இரண்டு விரிவாக்க திட்டங்கள் விரைவில் செயல்படுத்த கூடிய நிலையில் உள்ளன. 2100 கோடி மதிப்பிலான நான்கு திட்டங்களில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் கையெழுத்திட்ட அனைத்து திட்டங்களும் துரிதமாக செயல்பட்டு வருவதாக ஆதாரப்பூர்வமாக சுட்டிக் காட்டதான் விரிவாக இங்கே குறிப்பிட்டுள்ளேன். எனவே இதுபோன்ற பயணங்கள் மிக மிக முக்கியமானது. திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டு காலங்களில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. இதன் மொத்த மதிப்பு 9 லட்சத்து 99 ஆயிரத்து 93 கோடி ரூபாய் ஆகுமந். இதன் மூலம் 18 லட்சத்து 83 ஆயிரத்து 234 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 234 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதன் மூலம் 4 லட்சத்து 16 ஆயிரத்து 717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மற்ற ஒப்பந்தங்களும் படிப்படியாக செயல்பாட்டிற்கு வரும்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த என்னுடைய வெளிநாட்டு பயணங்களின்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டு செயல்பாட்டிலும் இருக்கின்றன. அதேபோல் தற்போதைய பயணம் மூலமாக மேற்கொள்ளும் ஒப்பந்தங்களையும் தொடர்ந்து கண்காணித்து அதையெல்லாம் செயல்பாட்டிற்கு கொண்டு வருவேன்.

இந்த முதலீடுகளின் மூலம் தமிழ்நாடு 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய இலக்கை விரைவாக அடைவோம். இதற்காக உலகின் கவனத்தை தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்க அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ மாநகரங்களுக்கு செல்கிறேன், நாடு திரும்பியதும் கையெழுத்து ஆகக்கூடிய ஒப்பந்தங்கள் குறித்து அனைவருக்கும் தெரிவிப்பேன். அதேபோல் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்திக்க உள்ளேன்.

இந்தியாவில் தமிழ்நாடு தான் தொழில் முதலீட்டில் முதலிடத்தில் உள்ளது. இதனை தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட வெளிநாடுகளில் இருப்பவர்கள் தான் அதிகம் சொல்கிறார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். குறிப்பாக, இந்த அமெரிக்க பயணம் முடிந்து தமிழ்நாடு திரும்பியதும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "மாற்றம் ஒன்றே மாறாதது; Wait and See" என்று முதல்வர் பதிலளித்தார்.

ரஜினி -துரைமுருகன் விவகாரம் குறித்த கேள்விக்கு, அவர்கள் இருவரும் நீண்டகால நண்பர்கள். இந்த விவகாரத்தை துரைமுருகன் சொன்னதைப் போன்றே, நீங்கள் நகைச்சுவையாக தான் எடுத்து கொள்ள வேண்டுமே தவிர, பகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஸ்டாலின் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 573 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது, பள்ளிக்கல்வித்துறையில் தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும், இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே பேசி உள்ளனர். சம்பந்தப்பட்ட அமைச்சர்களை நேரடியாக சந்தித்தும் கோரிக்கை வைத்துள்ளனர், நானும் இன்று பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details