தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 5:12 PM IST

Updated : Jun 7, 2024, 6:13 PM IST

ETV Bharat / state

திருப்பம் தரும் திருச்சியை தன்வசப்படுத்திய துரை வைகோ.. சாத்தியமானது எப்படி? - Trichy MP Durai Vaiko

MDMK Durai Vaiko: திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மதிமுக சார்பாக அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிட்டு வெற்றி பெற்றார். அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

திருச்சி வேட்பாளர்கள்
திருச்சி வேட்பாளர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி:தமிழ்நாட்டின் மையப் பகுதியாக திகழ்வது திருச்சி என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாடு அரசியலைப் பொறுத்தவரை அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் வரை திருச்சி என்றாலே திருப்பு முனையாக அமையும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். குறிப்பாக, தமிழக அரசியலில் கட்சி ரீதியாக எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றாலும், அனைத்து அரசியல் கட்சியினரும் முதலில்‌ மாநாடு நடத்த இடத்தை திருச்சியில் தேர்வு செய்வது தான் வழக்கம்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திருச்சி மேற்கு தொகுதி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகள் அடங்கியுள்ளன. தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் முயற்சி செய்தனர். திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் ம.தி.மு.க சார்பில் துரை வைகோ, அதிமுக தரப்பில் கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுகவைச் சேர்ந்த செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர் ராஜேஷ் ஆகியோர் களமிறங்கினர்.

வந்தாரை ஜெயிக்க வைக்கும் திருச்சி: திருச்சி தொகுதிக்கு, 'வந்தாரை ஜெயிக்க வைக்கும் தொகுதி' என்று பெயர் இருக்கிறது. காரணம், இந்த தொகுதியில் கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வென்றவர்கள் பலரும் வெவ்வேறு மாவட்டங்களைப் பூர்வீகமாக கொண்டவர்கள் தான். அந்த வகையில், இந்த முறையும் வெளி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவை திருச்சி தொகுதி மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

அதனையொட்டி துரை வைகோவுக்கும், திமுக தொண்டர்களுக்கும் இடையில் மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேடையில் இருக்கும்போதே 'உரசல்' ஏற்பட்டது. அதன்பிறகு, 'செத்தாலும், சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவேன்' என்று மேஜையை குத்தி ஆவேசமாகப் பேசி துரை வைகோ கண்ணீர் விட்டது என பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சியில் சமூகங்கள் வாக்குகளை பாதித்ததா? திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிகம் உள்ள சமூகமாக முத்தரையர், முக்குலத்தோர், பட்டியல் சமூக வாக்குகள் உள்ளன. ஆனால் ,சமூகங்களை சாராத துரை வைகோவின் வெற்றிக்கு சமூகங்கள் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அப்படி பாதித்திருந்தால், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களான அதிமுக வேட்பாளர் கருப்பையாவோ அல்லது அமமுக வேட்பாளர் செந்தில்நாதனோ தான் வெற்றி பெறும் நிலை இருந்து இருக்கக்கூடும்.

தேர்தலில் கூட்டணி கட்சிகளில் ஒத்துழைப்பு: மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு வாக்குப்பதிவுக்கு முன்பு குறுகிய காலகட்டத்தில் தேர்தல் ஆணையம் தாமதமாக ஒதுக்கிய தீப்பெட்டி சின்னம் ஆகியவை மக்கள் மத்தியில் புதிது என்றாலும், திமுக கூட்டணி, வைகோவின் மகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட அடையாளங்கள், துரை வைகோவை பல்வேறு இடங்களில் 'ரீச்' செய்தது.

ஆரம்பத்தில், திமுக கூட்டணி தான் பின்னடைவாகத் தெரிந்தது. அதிமுக வேட்பாளர் கருப்பையா ஊருக்கு முன் முதல் ஆளாக பிரசாரத்தை தொடங்கியதோடு, வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என்று வரையில் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டார்.

அதிமுக வேட்பாளர் கருப்பையாவின் பிரச்சாரத்தை பார்த்து அதிமுகவினர் கூட்டணிக் கட்சி ஆட்கள் மட்டுமின்றி, மாற்றுக்கட்சி நிர்வாகிகளும் மயங்கிப் போனார்கள். குறிப்பாக, துரை வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன், தனிச் சின்னத்தில் தான் போட்டிடுவேன் என்று பேசியது திமுகவினரிடையே பெரும் கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இதனால் துரை வைகோ பிரச்சாரம் செய்யும் போது, நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் மதிமுக வட்டாரங்களில் கேள்வியாக எழுந்தது.

திமுகவினருக்கு வருத்தம் இருந்தாலும், திருச்சியில் கூட்டணி கட்சி வேட்பாளர் தோற்றால் அது அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோருக்கு மட்டும் அவமானம் இல்லை, திமுகவிற்கு அவமானம் ஏற்பட்டுவிடும் என்று நிர்வாகிகள் எண்ணினர். இந்நிலையில், திமுக தலைமை அறிவுறுத்தலின்படி நடந்த முடிந்த‌ தேர்தலில் கடுமையாக பணியாற்றினர்.

மதிமுக வெற்றி: திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையான உழைப்பால் துரை வைகோ வெற்றி பெற்றிருக்கிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா இரண்டாவது இடம் வந்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 'ஜல்லிக்கட்டு' ராஜேஷ் இளைஞர்களிடம் அறிமுகமானவர் என்பதால், புதுமுக வாக்காளர்களின் வாக்குகளை கணிசமாக பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் செந்தில்நாதனோ நான்காம் இடம் பெற்றார். திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று சான்றிதழைப் பெற்றபின், தனக்கு வாக்களித்த திருச்சி தொகுதி மக்களுக்கு துரை வைகோ கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

திருச்சி தொகுதியில் 7,57,130 ஆண் வாக்காளர்களும், 7,96,616 பெண் வாக்காளர்களும் 239 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 15,53,985 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 5,12,264 ஆண் வாக்காளர்களும், 5,36,844 பெண் வாக்காளர்களும், 102 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 10,49,210 பேர் வாக்களித்தனர்.

பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள்:

  • மதிமுக (திமுக கூட்டணி) வேட்பாளர் துரை வைகோ: 5,42,213
  • அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா : 2,29,119
  • அமமுக (பாஜக கூட்டணி) வேட்பாளர் செந்தில்நாதன்: 1,00,747
  • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 'ஜல்லிக்கட்டு' ராஜேஷ்: 1,07,458

மதிமுக வேட்பாளர் துரை வைகோ தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையாவை விட 3,13,094 வாக்குகள் அதிகம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேச நலனே முதன்மையானது.. தமிழக மக்களுக்கு நன்றி.. என்டிஏ கூட்டத்தில் பிரதமர் பேசியது என்ன? - Nda Government Formation Update

Last Updated : Jun 7, 2024, 6:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details