விழுப்புரம்:நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகம்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த விஜய், கட்சியின் கொடியை கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்தார்.
அரசியல் மாநாடு:கொடி மற்றும் பாடல் வெளியீட்டிற்குப் பின்னர், கட்சியின் சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர். தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அக்டோபர் 4 ஆம் தேதி மாநாட்டு பணிகள் தொடங்கி மாநாட்டிற்கான பந்தல், மேடை , விளக்குகள் அமைக்கும் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
மாநாட்டு பந்தல்:மாநாட்டிற்காக 170 அடி நீளம், 60 அடி அகலம் மற்றும் 30 அடி உயரத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டின் பிரதான நுழைவு வாயில் செயின்ட் ஜாா்ஜ் கோட்டை போன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டின் தொடக்கமாக கட்சித் தலைவர் விஜய் கொடியேற்றுவதற்காக 100 அடி உயர கொடிக்கம்பமும் அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் மேடையிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று தொண்டர்களை சந்திப்பதற்காக, நடைமேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்:மாநாடு நடைபெறும் பகுதியை கண்காணிக்க சுமாா் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சுமாா் 300 தற்காலிக குடிநீர் தொட்டிகளும், 350 நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டின் முகப்பு வாயிலில் இருந்து மாநாட்டு திடல் வரும் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் 600க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்பட்டு அதில் 15 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கட்சிக்கொடியை பறக்க விடப்பட்டுள்ளது.
விஜய் செல்ல சிறப்பு சாலை:கட்சியின் தலைவர் விஜய் செல்வதற்காக சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் பிரத்யேகமாக சிறப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் செல்லும் சிறப்பு சாலையில் யாரும் நுழைந்து விடாமல் தடுக்க 10 அடியில் இரும்பு தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரம் தொண்டர்கள் சீருடையுடன் ஈடுபட உள்ளனர் என்றும், 150 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு மாநாட்டில் தயார் நிலையில் இருப்பார்கள் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான ஏற்பாடுகள்: பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியாக இடம் ஒதுக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு என தண்ணீர், கழிவறை மற்றும் உதவும் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
50 ஆயிரம் இருக்கைகள்:தரைத்தளத்தில் இருந்து மேடை 12 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் உள்ளவர்களை எளிதில் காணக்கூடிய வகையில், 1500 இருக்கைகளுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு, சுமார் 50,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.