தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசிக இளைஞர் படுகொலை விவகாரம்; மயிலாடுதுறையில் சாலை மறியல்! - VCK Youth Murder

VCK Youth Murder: மயிலாடுதுறை அருகே விசிகவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரை நடுரோட்டில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 9:04 PM IST

கொலை செய்யப்பட்ட ராஜேஷ்
கொலை செய்யப்பட்ட ராஜேஷ் (Credit - Etv Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி நடராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் ராஜேஷ் (26). இவருக்கு விபத்தில் ஒரு காலினை இழந்து செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் தனியாக சென்றுள்ளார். பின்னர், வீட்டிற்கு திரும்பிய போது பெட்ரோல் பங்கிற்கு அருகில் மயிலாடுதுறை செல்லக்கூடிய பிரதான சாலையில் அடையாளம் தெரியாத சிலர் ராஜேஷ்-ஐ வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஷின் தலை மற்றும் உடல் பகுதிகளில் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ராஜேஷின் பெற்றோர், அப்பகுதி மக்கள் மற்றும் விசிக பிரமுகர்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டு குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உடலை எடுக்கவிடாமல் போராட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்தில் எஸ்பி மீனா நேரில் விசாரணை மேற்கொண்ட நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மணல்மேடு போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு ராஜேஷ் இருசக்கர வாகனத்தில் வந்தபோது ரஞ்சித்தின் ஆட்டோ மீது மோதியது தொடர்பான வழக்கில் ரஞ்சித் சிறைக்குச் சென்று வந்துள்ளார். தொடர்ந்து ராஜேஷ், ரஞ்சித் வீட்டில் தகாத வார்த்தைகளைப் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு தனியாக வந்த ராஜேஷ்சை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

இந்நிலையில், ஒருவரால் மட்டும் ராஜேஷ்-ஐ கொலை செய்ய முடியாது. மேலும், வழக்கில் குற்றவாளிகள் உள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மருத்துவமனை அருகே மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் மோகன்குமார் தலைமையில் கிட்டப்பா அங்காடி முன்பு அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் மயிலாடுதுறையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த ராஜேஷின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ரயிலில் பயணிகளுக்கு மயக்க காபி கொடுத்து கைவரிசை காட்டிய இளம்பெண் கைது! - Young Woman arrested for stealing

ABOUT THE AUTHOR

...view details