திருச்சி:இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சி வந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஶ்ரீரங்கம் தொகுதி அல்லூர் ஊராட்சி பாரதி துவக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுடன் காலை உணவு அருந்தினார்.
இதனை தொடர்ந்து துறையூர் அருகே உள்ள பச்சைமலையில் தென்புற நாடு பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் பச்சை மலையில் அமைந்துள்ள சின்ன இலுப்பூர் கிராமத்திற்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு ஜே.இ.இ (JEE) தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என்.ஐ.டி-யில் (Trichy NIT) சேர்ந்துள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ரோகினியை அவர் வீட்டில் சந்தித்தார்.
தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை கூறி சிறிது நேரம் கலந்துரையாடினார். அந்த மாணவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தேநீர் வழங்கினார். தொடர்ந்து ரோகினி குடும்பம் விவசாயம் செய்ய ஏதுவாக டிராக்டர் ஒன்றையும் அமைச்சர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை அடுத்து ரோகிணி இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு மின் வசதிக்கான சேவையையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ் சிவசங்கர், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் தங்கள் இல்லம் தேடி வந்து தன்னை சந்தித்தது பெருமையாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மாணவி ரோகினி தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் தன்னிடம் கல்வி குறித்து கலந்துரையாடினார். என்னவாக விருப்பம் என என்னிடம் கேட்டார். அதற்கு நான் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என கூறினேன். அதற்கும் வாழ்த்து தெரிவித்தார். நன்றாக படிக்க வேண்டும் அரசு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என கூறியதாக மாணவி ரோகினி தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாத யாத்திரையின்போது பரிதாபம்.. லாரி மோதி மூன்று பேர் பலி..! தென்காசி அருகே சோகம்! - TENKASI DEVOTEES LORRY ACCIDENT