சென்னை:வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, '2015ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு, அப்போதே முடித்து வைக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை' எனவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, 'காவல்துறையினர் பதிவு செய்யும் வழக்குகளில் புலன் விசாரணை முடிந்த பின், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது இது முதல் வழக்கல்ல எனவும், தமிழ்நாடு முழுவதும் பல வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை' என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார்.