தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Bagmathi Express Accident: நேரில் சென்ற அமைச்சர்கள்: மருத்துவமனை சென்ற உதயநிதி- தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை

திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து, தலைமைச்செயலகம்
பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து, தலைமைச்செயலகம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை :கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை, பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

ரயில் விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது நேற்றிரவு 8.30 மணியளவில், மைசூரிலிருந்து பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி செல்லும் பாக்மதி அதிவிரைவு பயணிகள் ரயில் (12578) மோதியது.

இதில், ரயிலின் முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டது. அதில் ஒரு பெட்டியில் தீ விபத்தும் ஏற்பட்டது. பயணிகள் ரயிலில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நேற்றிரவு தகவல் கிடைத்தவுடன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில், சம்மந்தப்பட்ட நிகழ்விடத்திற்கு அயல்நாட்டுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆகியோர்
சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க :மத்திய அரசு விழிக்க எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? - ராகுல் சரமாரி கேள்வி!

இந்நிகழ்வில் பயணிகள் ரயிலில் சுமார் 1,600 பேர் பயணம் செய்ததாக தெரிய வருகிறது. சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 19 நபர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களில் மூன்று பயணிகள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காயமடைந்த 4 பயணிகள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், விபத்து நடந்த இடத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விவரம், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான மாற்று ஏற்பாடு, உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்து அவற்றை உரிய முறையில் செய்து தரப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

இந்த விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளுக்காக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 தீயணைப்பு வாகனங்கள் வட மண்டல இணை இயக்குனர் தலைமையில் இரண்டு மாவட்ட அலுவலர்கள் மூன்று நிலைய அலுவலர்கள் மற்றும் 25 தீயணைப்பு வீரர்களுடன் துரிதமாக செயல்பட்டது.

இதனால் விபத்து இடத்தில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டு இதர பெட்டிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதுதவிர விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 28 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 3 மருத்துவக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

விபத்தினால் தங்கள் பயணத்தை தொடர முடியாத பயணிகள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கவரைப்பேட்டையிலுள்ள கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் இதர வசதிகள் செய்து தரப்பட்டதுடன், அத்திருமண மண்டபங்களிலிருந்து பொன்னேரி ரயில் நிலையத்திற்கு 20-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்டு, பொன்னேரியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

நேற்றிரவு நடந்த ரயில் விபத்தில் உரிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு உயிர்சேதம் ஏதும் ஏற்படாமல் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்ததுடன், பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவருக்கும் தேவையான உதவிகள் வழங்கியதற்காக தமிழ்நாடு அரசுக்கு அப்பயணிகள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details