தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: 'அவசரகதியில் முதல்வர் செயல்பாடு' - ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அறிக்கை

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் என்ற வார்த்தையை தவறவிட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ஆளுநர் ஆர் என் ரவி, மு.க.ஸ்டாலின்
ஆளுநர் ஆர் என் ரவி, மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை : சென்னை சேப்பாக்கம், டிடி மண்டல அலுவலகத்தில் இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் டிடி தொலைக்காட்சி பொன்விழா நிகழ்ச்சி இன்று (அக்.18) நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கிய நிலையில், நிகழ்ச்சி தொடங்கும் முன், முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரியை விட்டு பாடப்பட்டது சர்ச்சைக்குயானது.

பின்னர், இது தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில், "ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.

இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க :தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஆளுநரா, ஆரியநரா? என முதல்வர் காட்டம்.. தவறு செய்தது யார் என கருநாகராஜன் விளக்கம்!

இந்நிலையில், ஆளுநர் மாளிகை வாயிலாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும், உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதலமைச்சர் நன்றாக அறிவார்.

பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார். ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன்.

அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.

தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details