அநீதியின் முழு உருவம் பாஜக என்பது நிரூபணமாகியுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்! - MK STALIN CRITICIZE BJP
தமிழ்நாட்டு மக்கள் மீதான வெறுப்பு மற்றும் நமக்கு இழைக்கப்படும் அநீதியின் முழு உருவம் பாஜக என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போடவில்லை என்பதற்காக, இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசும் ஒரு மாநிலத்தை அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்காக மாணவர்களின் கல்விக்குத் தடை ஏற்படுத்தும் அளவுக்குக் இரக்கமில்லாமல் நடந்துகொண்டதில்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் ஒருங்கிணைந்த இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு பிஎம் ஸ்ரீ பள்ளி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாடு அரசு கையெழுத்து போடுவதற்கு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், மத்திய அரசு பள்ளிக்கல்வித் துறைகான நிதியை ஒதுக்கீடு செய்தும் விடுவிக்காமல் உள்ளது.
இந்த நிலையில் பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்திற்கான நிதியை வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், “தமிழ்நாட்டுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் அட்டூழிய மனப்பான்மைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய, ரூ.2 ஆயிரத்து 152 கோடியை பறித்து தற்போது வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளனர். உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களைத் தண்டிக்கும் நோக்கில் இத்தகைய வலுக்கட்டாயமான செயலைச் செய்கின்றனர்.
இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசும் ஒரு மாநிலத்தை அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்காக, மாணவர்களின் கல்விக்குத் தடை ஏற்படுத்தும் அளவுக்குக் இரக்கமில்லாமல் நடந்துகொண்டதில்லை. தமிழ்நாட்டு, தமிழ் மக்கள் மீதான வெறுப்பு மற்றும் நமக்கு இழைக்கப்படும் அநீதியின் முழு உருவம் பாஜக என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர் விரோத மத்திய அரசு:
இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடியை குஜராத், உத்திரபிரதேசம் போன்ற பிற மாநிலங்களுக்கு தமிழர் விரோத மத்திய அரசு அளித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான PMShri திட்டத்தில் நாம் இணைய வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. அத்திட்டத்தில் இணைந்தால் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்த நேரிடும் என்பதால் உறுதியுடன் நாம் மறுத்து வருவதால் நமக்கு தரவேண்டிய நிதியை அவர்கள் ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கி உள்ளது பாசிச பாஜக அரசு.
வஞ்சக மனப்பான்மையோடு செயல்படும் மத்திய பாசிச அரசை மாணவர்களும், ஆசிரியர்களும் மன்னிக்க மாட்டார்கள். மாநில உரிமையைப் பெறும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம். கல்வி விடுதலை ஒன்றே நமது மாநிலத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு தீர்வு தரும்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.