தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குவைத் தீ விபத்து; உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு! - Kuwait Fire accident Helpline - KUWAIT FIRE ACCIDENT HELPLINE

Kuwait Fire accident: குவைத் நாட்டில் நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

MK Stalin
முக ஸ்டாலின் (Credits - DMK 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 10:16 PM IST

சென்னை: குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில், நேற்று (ஜூன் 12) ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், திருச்சியைச் சேர்ந்த எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னையைச் சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், இராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பணன் இராமு மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாகக் கொண்டு வருவதற்கு குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, உயிரிழந்த ஏழு தமிழர்களின் உடல்களும், தனிவிமானத்தின் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இந்தியாவை வந்தடையும் தமிழர்களின் உடல்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும், தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல், இந்த தீ விபத்தில் காயமடைந்து, குவைத் நாட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் தமிழர்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டுமாறு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி, அதன் பேரில் உரிய நடவடிக்கைகளை அத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில், சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய தேவையான உதவிகளை குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து அயலகத் தமிழர் நலத்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலத்துறையின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இந்தியாவிற்குள் தொலைபேசி எண் +91 1800 309 3793, அதே போன்று குவைத் நாட்டில் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண் +91 80 6900 9900, +91 80 6900 9901. இந்த இரண்டு எண்கள் வாயிலாகவும், அயலகத் தமிழர் நலத்துறையைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:குவைத் தீ விபத்து: உயிரிழந்த தமிழர்களின் விவரங்கள் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details