தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“இ-பாஸ் மூலம் வணிகரீதியாக பாதிப்பில்லை” - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா! - TN Chief Secretary Shivdas Meena - TN CHIEF SECRETARY SHIVDAS MEENA

TN Chief Secretary Shivdas Meena: கோயம்புத்தூரில் உள்ள இ-பாஸ் சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் வேண்டி பதிவு செய்த உடனே பயணிகளுக்கு உடனடியாக இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது என்றும், இதனால் வணிக ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா புகைப்படம்
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 2:39 PM IST

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்:கோடை காலத்தின் வெயில் கொடுமையைச் சமாளிக்க ஆண்டுதோறும் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களுக்குச் செல்வது வழக்கம். தற்போது கோடை காலம் தொடங்கியதில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் சதமடித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட, அதிகப்படியான மக்கள் குளிர் பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளை தேடிச் சென்று வருகின்றனர்.

இது அந்த மலைப்பிரதேசங்களில் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, அதனைக் கட்டுப்படுத்த, கரோனா காலத்தைப் போல இ-பாஸ் நடைமுறையைப் பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. அதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் 13 வழித்தடங்களிலும் இ-பாஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து நீலகிரி மாவட்டம் செல்லக்கூடிய ஊட்டி சாலையில், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு தூரி பாலம் சோதனைச்சாவடி, கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரி சோதனைச்சாவடி என இரு இடங்களில் இ-பாஸ் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் நீலகிரி மாவட்டத்திற்குச் செல்லக்கூடிய வாகனங்கள் இ-பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே, அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இ-பாஸ் பெறாத வாகனங்களை நிறுத்தி இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகளைச் சொல்லி வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி இ-பாஸ் எடுத்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மேட்டுப்பாளையம் கல்லாறு தூரி பாலம் அருகே செயல்பட்டு வரும் சோதனைச்சாவடியில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, “இ-பாஸ் நடைமுறைபடுத்தியபோது, அரசு ஒப்புதல் வழங்கினால் தான் இ-பாஸ் பெற முடியும் என சுற்றுலா பயணிகள் சற்று குழம்பி இருந்தனர். ஆனால் தற்போது அப்படி இல்லை. யார் வேண்டுமானாலும், இ-பாஸ் பெறலாம் என்று தெரிந்த பின்பு அனைவரும் எளிதாக இ-பாஸ் பெறுகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் வேண்டி பதிவு செய்த உடனே பயணிகளுக்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இ-பாஸ் தொடக்க நாளில் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதியில் உள்ள வணிகர்கள் தங்களது தொழில் பாதிக்கப்படும் என்று அச்சமடைந்தனர். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு எளிதாகவும், உடனடியாகவும் கிடைப்பதால் தற்போது வணிகரீதியாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை” என்று கூறினார்.

இந்த ஆய்வின் போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கூடுதல் ஆட்சியர் கெளசிக், வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், வட்டாட்சியர் சந்திரன், நகராட்சி ஆணையாளர் அமுதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:“கண்காணிப்பு கேமராக்கள் மாற்ற ஏற்பாடு” - கோவை ஆட்சியர் தகவல்! - Pollachi Strong Room CCTV

ABOUT THE AUTHOR

...view details