சென்னை: நாடு முழுவதும் 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்திலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “வேட்புமனுத் தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை சமர்ப்பிக்கப்படும் புதிய வாக்காளர் பெயர்களை சேர்ப்பதற்கான படிவங்கள் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு பரிசீலிக்கப்படும். அதற்குப்பின் வரும் படிவங்கள் பெற்றுக் கொள்ளப்படும், ஆனால் பரிசீலிக்க நேரம் இருக்காது.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் வாக்குகள் சேகரிக்கக் கூடாது. விழாக்கள் நடத்தலாம், பிரச்சாரம் செய்யக் கூடாது. அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளலாம். இப்தார் நோன்பு திறக்கும் போது தலைவர்கள் கலந்து கொள்ளலாம். ஆனால், வாக்கு சேகரிக்கக் கூடாது. சமூக வலைத்தளப் பதிவுகள் குறித்து அரசியல் கட்சிகள் புகார் அளித்தால், அதற்கான சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் படிவம் 12-ஐ பூர்த்தி செய்து கொடுத்தால், வீட்டிலிருந்து வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கிராம நிர்வாக அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று பணிகளை மேற்கொள்வார்கள். 100 சதவீத வாக்குச் சாவடிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் செல்லத் தேவையான வசதிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.