தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த நெல்லை மாற்றுத்திறனாளி மாணவர்! - TN 10th results - TN 10TH RESULTS

Tirunelveli specially abled student: நெல்லையில் பிறவியில் இருந்தே மாற்றுத்திறனாளியாக இருக்கும் மாணவர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

சாதனை‘மாணவர் தமிழ்செல்வம், தாய் பாப்பம்மாள், ஆசிரியர்கள்
சாதனை‘மாணவர் தமிழ்செல்வம், தாய் பாப்பம்மாள், ஆசிரியர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 8:47 PM IST

திருநெல்வேலி: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகின. மொத்தம் 91.55 சதவீதம் பேர தேர்ச்சி பெற்றுள்ளனர். அத்துடன் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

அந்த வகையில், நெல்லையில் கை. கால் செயலிழந்து நடக்க முடியாத மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் கடினமாக படித்து 420 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். நெல்லை மீனாட்சிபுரம் அடுத்த புளியந்தோப்பு நடுத்தெருவை சேர்ந்த சசிகுமார் - பாப்பம்மாள் தம்பதியின் மகன் தமிழ்செல்வம்.

இவரது தந்தை தனியார் பேக்கரி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மகன் தமிழ்செல்வம் பிறவி முதலே கை, கால்கள் செயலிழந்து நடக்க முடியாத மாற்றுத்திறனாளியாக உள்ளார். இருப்பினும், தன்னம்பிக்கையின் காரணமாக மனம் தளராது 6ஆம் வகுப்பு முதல் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ம.தி.தா. இந்து பள்ளியில் பயின்று வருகிறார்.

பெற்றோரின் உதவியுடன் தினமும் பள்ளி சென்று வந்த தமிழ்செல்வன், இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை உதவியாளர் வைத்து எழுதியிருந்தார். தனது கடின முயற்சியால் 420 மதிப்பெண்கள் எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார்.

மாணவர் தமிழ்செல்வன், தமிழ் பாடத்தில் 88 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 76 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 88 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 83 மதிப்பெண்களும் மற்றும் சமூக அறிவியலில் பாடத்தில் 85 மதிப்பெண்களும் எடுத்துள்ளார்.

இதுகுறித்து மாணவர் கூறுகையில், "என் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகும். 420 மதிப்பெண்கள் கிடைக்க காரணமாக இருந்த எனது பெற்றோர், ஆசிரியர்கள் எனது நண்பர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், தினமும் அம்மா தான் ஆட்டோவில் என்னை பள்ளிக்கு அழைத்து வருவார்.

நான் அதிக மதிப்பெண் எடுக்க ஆசிரியர்கள் தான் காரணம். மேல்நிலைக் கல்வியில் வரலாறு பாடப்பிரிவு எடுத்து படிக்க உள்ளேன். எனது எதிர்கால லட்சியம் சட்டம் படித்து சிறந்த வழக்கறிஞராக ஆகி நீதிபதி சந்துரு போன்ற பெரிய நீதிபதி ஆக வேண்டும் என்பது தான்" என்று தமிழ்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:“ஐஏஎஸ் ஆவதே என் கனவு” ஒட்டன்சத்திரம் மாணவியின் சாதனைக்குக் குவியும் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details