தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழு விசாரிக்கும்...மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவு - THREE WOMEN IPS OFFICERS PANEL

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2024, 1:58 PM IST

சென்னை:அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி டிச.23ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் வரலட்சுமி,மோகன்தாஸ் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல்துறை, அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க நேற்று உத்தரவிட்டது.

சைபர் கிரைம் விசாரணை:இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லக்ஷ்மி நாராயணன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், "புகார்கள் பதிவு செய்யப்பட்டதும் எப்.ஐ.ஆர் தன்னிச்சையாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பாலியல் வழக்கில் எப்படி எப்.ஐ.ஆர் கசிந்தது என சைபர் கிரைம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

எப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்தில் 14 பேர் அடையாளம் காணப்பட்டு கண்கானிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செல்போன் நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ஒரு குற்றவாளி மட்டுமே இருப்பதாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார். தொடர் விசாரணைக்குப் பின்னர்தான் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும்,"என தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,"எதிர்காலத்தில் இது போல சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை அதிகரிக்க காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது,"என தெரிவித்தார்.

இருபாலரும் சமம்:இதையடுத்து வழக்கை விசாரத்த நீதிபதிகள்,"யார் எப்.ஐ.ஆர் பதிவிறக்கம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க வசதி இருந்தும் ஏன் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை? புகார் அளிப்பதற்கு காவல் நிலையத்திற்கு மக்கள் வருவதற்கே பயப்படும் நிலைதான் தற்போது உள்ளது.அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதில் என்ன சிரமம் உள்ளது. மாறாக, பத்திரிகைகள் தவறாக திரித்து வெளியிட்டு விட்டதாக கூறக்கூடாது.3 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு விசாரணை செய்வதில் தமிழக அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. குழுவின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

அதனால், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிக்கிறது, ஒரு குற்றம் நடைபெற்றால் அதில் பெண் தான் முதலில் குற்றம் சாட்டப்படுகிறார். ஆண்,பெண் இருபாலரும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும். பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். பெண்கள் மீது மட்டும் குற்றம் சாட்டப்படுவது குற்றவாளிக்கு சாதகமாகிவிடும். தனிப்பட்ட முறையில் பெண்கள் பேசுவது ஒன்றும் தவறு இல்லை. அது அவர்களுக்கான உரிமை.அதில் யாரும் தலையிட முடியாது. ஆண் என்பதற்காக, பெண்களை தொட உரிமை இல்லை. பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை இந்த சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டும்.

வழக்கு முடித்து வைப்பு:மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு இனி விசாரணை செய்யும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். மாணவியிடம் இருந்து கல்வி கட்டணம் ஏதும் அண்ணா பல்கலைக்கழகம் வசூலிக்க கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் பதிவு செய்யப்படும் எப்ஐஆர் வெளியாகாமல் இருப்பதை காவல்துறை ஆணையர் உறுதிபடுத்த வேண்டும். பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இ்வ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரை பற்றி தகவல்களை தெரிவித்த சென்னை மாநகர காவல் ஆணையர் மீது தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம்,"என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details