தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 12:02 PM IST

ETV Bharat / state

'இரிடியம் ரூ.1 கோடியாம்'.. நம்பி சென்ற தொழிலாளிக்கு கிடைத்த அதிர்ச்சி.. சத்தியமங்கலம் அருகே மூன்று பேர் கைது! - fake iridium scam

iridium scam in sathyamangalam: சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போலி இரிடியம் செம்பை விற்று தந்தால், பல லட்ச ரூபாய் கமிஷன் தருவதாக கூறி முன்பணம் பெற்றுக்கொண்டு, தொழிலாளியை மிரட்டிய மோசடி கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

இரிடியம் மோசடியில் கைதானவர்கள்
இரிடியம் மோசடியில் கைதானவர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)

சத்தியமங்கலம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (43). இவர் தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியனை தொடர்பு கொண்ட நான்கு பேர் கொண்ட கும்பல், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் செம்பு கிடைத்திருப்பதாகவும், அதனை விற்று தந்தால் பல லட்ச ரூபாய் கமிஷனாக தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

அதை நம்பிய சுப்பிரமணியன் இரிடியம் செம்பை பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். பத்தாயிரம் ரூபாய் பணம் அட்வான்ஸ் ஆக கொடுத்தால் தான் இரிடியம் செம்பை பார்க்க முடியும் என நான்கு பேரும் கூறியதை நம்பி, பணம் கொடுத்த சுப்பிரமணியனை சத்தியமங்கலம் அருகே உள்ள குமாரபாளையம் தவளகிரி ஆண்டவர் மலைக்கோயில் அருகே வருமாறு கூறியுள்ளனர்.

அங்கு சென்ற சுப்பிரமணியணிடம், இரிடியம் செம்பை காட்டிய போது அது போலியானது என தெரிய வந்த நிலையில், போலி இரிடியம் செம்பை என்னால் விற்க முடியாது, நான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தருமாறு சுப்பிரமணியன் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, இரிடியம் செம்பு குறித்து வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர்.

இது குறித்து சுப்பிரமணியன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் மோசடி கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், சத்தியமங்கலம் அத்தாணி ரோடு பகுதியில் பதுங்கியிருந்த மோசடி கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர்.

போலீசார் விசாரணையில், அவர்கள் சத்தியமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த சுந்தர பாண்டி (43), குமாரபாளையத்தை சேர்ந்த செம்புலிபிரபு (36), சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜீனத் குமார் (27) என்பது தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:காதலர்களை மிரட்டி கூகுள் பே மூலம் பணம் பறிப்பு.. தஞ்சையில் நான்கு பேர் கைது..! பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details