தமிழ்நாடு

tamil nadu

அண்ணனின் திருமணத்தை மீறிய உறவால் தம்பிக்கு நேர்ந்த சோகம்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன? - Thoothukudi Murder Incidents

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 7:37 AM IST

Two Murder Incidents In Thoothukudi: தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் மற்றும் தருவைகுளம் ஆகிய பகுதிகளில் நடந்த இருவேறு கொலை சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பிரவீன்குமார் மற்றும் கைது செய்யப்பட்ட செல்லப்பா
உயிரிழந்த பிரவீன்குமார் மற்றும் கைது செய்யப்பட்ட செல்லப்பா (Credits- ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்லப்பா(27), என்பவரது மனைவி சக்தி என்பவருக்கும், முத்தையாபுரம் அய்யன் கோயில் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்(30) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், இதனை பலமுறை செல்லப்பா கண்டித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி செல்லப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் சக்தியை, வினோத் வந்து சந்தித்ததாகவும், அப்போது அங்கு வந்த செல்லப்பா வினோத்தை கண்டித்து அனுப்பியதுடன் தனது வீட்டை உடனடியாக காலி செய்துவிட்டு குடும்பத்துடன் ஏரல் அருகே உள்ள மாரமங்கலம் கிராமத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், செல்லப்பா நேற்று (செப்.06) வினோத்தை தேடி முத்தையாபுரம் அய்யன் கோயில் தெரு பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றதாகவும், ஆனால் வீட்டில் அவர் இல்லாத நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது தம்பி பிரவீன்குமார் (25) என்பவரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, அங்கிருந்து செல்லப்பா தப்பி ஓடியதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், அரிவாளால் வெட்டப்பட்ட பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே துடி, துடிக்க உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த முத்தையாபுரம் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி உடனடியாக செல்லப்பாவை கைதும் செய்துள்ளனர். தற்போது, அண்ணனின் திருமணத்தை மீறிய உறவால், தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி மிக்கேல் இவரது படகில் காரைக்குடியைச் சேர்ந்த ஆனந்த்(33) என்பவர் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், ஆனந்த் தருவைகுளம் மீன் ஏல கூடம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நேற்று (செப்.06) கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருவைகுளம் காவல்துறையினர், ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளி யார்? என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தூத்துக்குடியில் ஒரே நாளில் அரங்கேறிய இந்த 2 கொலைகளும் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆக்கிரமிப்பு வீட்டை அகற்ற வந்த அதிகாரிகள்! ஜேசிபி முன் பாய்ந்த பெண்ணால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details