தமிழ்நாடு

tamil nadu

சப் -இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வாலிபர்கள்.. வாகன சோதனையின்போது நெல்லையில் பயங்கரம்! - murder attempt on police

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 9:35 PM IST

நெல்லை அருகே வாகன சோதனையின்போது போலீஸ் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

காவல் நிலையம்
காவல் நிலையம் (credit - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, நேற்று முன்தினம் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரித்விராஜ் தலைமையில் பாளையங்கோட்டை- சீவலப்பேரி ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த வாலிபர்கள் 4 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்றனர். இதனை பார்த்த உதவி ஆய்வாளர் பிரித்விராஜ் உடனடியாக அவர்களை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து உதவி ஆய்வாளரை வெட்டிக்கொலை செய்ய முயன்றனர்.

இதனை பார்த்து நொடி பொழுதில் சுதாரித்துக்கொண்ட உதவி ஆய்வாளர் பிரித்விராஜ் அங்கிருந்து சற்று தள்ளி சென்றுவிட்டார். இதனால் அவர் உயிர் தப்பினார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் உடனடியாக 4 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதையும் படிங்க:"காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டருக்கு சம்போ செந்தில் தான் காரணம்" - பாலாஜியின் தாய் பகீர் குற்றச்சாட்டு!

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த சூரியா மகன் தினேஷ் (வயது 21), கண்ணன் மகன் ஆனந்தன் (20), சம்பத் மகன் குணா (20), நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த கவியரசன் (20) என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 230 கிராம் கஞ்சா, வாள், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் எப்படி இங்கு வந்தார்கள்? அவர்களுக்கு நெல்லை டவுனை சேர்ந்த கவியரசனுடன் எப்படி பழக்கம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன சோதனையில் உதவி ஆய்வாளரை வாலிபர்கள் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details