சென்னை: வங்கி மோசடி தொடர்பான வழக்குகளில், பதான் அப்சர் உசேன், ஜீவானந்தம் ராஜேஷ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சேஷசாயி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, "இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமை என்பது, வளத்துடன் வளர்வது என்றும், விடுமுறை தொடங்கி தொழில் மேம்பாடு, கல்வி, புனிதப் பயணம் ஆகிய காரணங்களுக்காக பலர் வெளிநாடுகளுக்கு செல்வதுண்டு என்றும் குறிப்பிட்டார்.
குற்ற நீதி பரிபாலனம், குற்றம்சாட்டப்பட்டவரின் பங்களிப்பை உறுதிசெய்ய வேண்டுமே தவிர, அவரது தனிப்பட்ட வாழ்வுரிமையை பாதிக்க கூடியதாக இருக்கக் கூடாது. வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவார் என்ற அச்சம் சிபிஐ போன்ற புலன் விசாரணை அமைப்புகளுக்கு வரக்கூடாது என்றும், அவர்கள் நாடு திரும்பக் கூடிய அளவில் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை இருக்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, "ஒரு சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பித்து விட்டதால் தான், ஒவ்வொரு வழக்கிலும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுவதாக்க" குறிப்பிட்ட நீதிபதி, "குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வெளிநாடு செல்லும் உரிமையை வழங்குவதுடன், அவர் நாடு திரும்புவதை உறுதிசெய்யும் வகையில் நிபந்தனைகளை விதிக்கலாம்" என கூறினார்.