தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லுக் அவுட் நோட்டீஸ்; சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்..! - LOOK OUT NOTICE

வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையிலான நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 6:23 PM IST

சென்னை: வங்கி மோசடி தொடர்பான வழக்குகளில், பதான் அப்சர் உசேன், ஜீவானந்தம் ராஜேஷ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி சேஷசாயி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, "இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமை என்பது, வளத்துடன் வளர்வது என்றும், விடுமுறை தொடங்கி தொழில் மேம்பாடு, கல்வி, புனிதப் பயணம் ஆகிய காரணங்களுக்காக பலர் வெளிநாடுகளுக்கு செல்வதுண்டு என்றும் குறிப்பிட்டார்.

குற்ற நீதி பரிபாலனம், குற்றம்சாட்டப்பட்டவரின் பங்களிப்பை உறுதிசெய்ய வேண்டுமே தவிர, அவரது தனிப்பட்ட வாழ்வுரிமையை பாதிக்க கூடியதாக இருக்கக் கூடாது. வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவார் என்ற அச்சம் சிபிஐ போன்ற புலன் விசாரணை அமைப்புகளுக்கு வரக்கூடாது என்றும், அவர்கள் நாடு திரும்பக் கூடிய அளவில் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை இருக்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, "ஒரு சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பித்து விட்டதால் தான், ஒவ்வொரு வழக்கிலும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுவதாக்க" குறிப்பிட்ட நீதிபதி, "குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வெளிநாடு செல்லும் உரிமையை வழங்குவதுடன், அவர் நாடு திரும்புவதை உறுதிசெய்யும் வகையில் நிபந்தனைகளை விதிக்கலாம்" என கூறினார்.

இதையும் படிங்க:கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மேலும், "லுக் அவுட் நோட்டீசுக்கு மாற்று நடவடிக்கைக்கு இறுதி வடிவம் வழங்கும் வரை, தனி நபரின் பயண உரிமையை பாதிக்காத வகையில் லுக் அவுட் சுற்றறிக்கை நீடிக்கலாம்" என்று தெரிவித்த நீதிபதி, "குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதாக இருந்தால், தங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்" என அறிவுறுத்தினார்.

இதுமட்டும் அல்லாது, "இந்த மனுக்களை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றங்கள், குறிப்பிட்ட தொகையையோ? அல்லது அதற்கு ஈடான சொத்துக்களை டெபாசிட் செய்யும்படி நிபந்தனை விதிக்கலாம். உறவினர் அல்லது தொழில் பங்குதாரர்களின் பாஸ்போர்ட்டை விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் நாடு திரும்பிய பிறகு அதை திருப்பிக்கொடுக்கலாம். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைத்து வெளிநாடு செல்ல அனுமதிக்கலாம் என விசாரணை நீதிமன்றங்களுக்கு" உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் இருவரும் தலா 10 லட்ச ரூபாய்க்கு சொந்த பிணையும், அதே தொகைக்கு இரு நபர் பிணையும், உறவினரின் பாஸ்போர்ட்டை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென நிபந்தனை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைத்து, இருவரும் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details