தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எத்தியோப்பியாவில் இருந்து ரூ.10 கோடி மதிப்புடைய கொக்கைன் கடத்தல் - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்! - Cocaine seized

Cocaine Smuggling at Chennai Airport: எத்தியோப்பியா நாட்டிலிருந்து விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய ஒரு கிலோ கொக்கைன் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 10:51 PM IST

பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன்
பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய ஒரு கிலோ கோக்கையின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவான என்சிபி எனப்படும் நார்கோடிக்ஸ் கண்ட்ரோல் பீரோவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து என்சிபி தனிப்படையினர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளையும் சேர்த்துக்கொண்டு என்சிபி மற்றும் சுங்கத்துறை இணைந்து தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடீஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை என்சிபி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது, தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த பிரடிலீன் ஏப்ரல்(Friedelin April) (54) என்ற பெண் பயணி, சுற்றுலா பயணி விசாவில் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து சென்னை வந்திருந்தார். அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவர் வைத்திருந்த ட்ராலி டைப் பையின் அடிப்பாகத்தில் ரகசிய அறை இருந்தது தெரியவந்தது. அதைத் திறந்து பார்த்த நிலையில், அதனுள் போதை பவுடர் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக பயணியை என்சிபி அதிகாரிகள் சென்னை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து, போதை பவுடர் என்ன ரக போதைப் பொருள் என்பதை கண்டறிவதற்காக ரசாயன ஆய்வுக்கூடத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இந்த போதை பவுடர் அதிக சக்தி வாய்ந்த கோக்கையின் போதைப் பொருள் என்று தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.10 கோடி. ஒரு கிலோ எடையுள்ள போதை பொருளை என்சிபி அதிகாரிகள் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில் இந்த போதை பொருளை சர்வதேச போதை கடத்தும் கும்பலிடம் இருந்து வாங்கி வந்ததும், அந்த சர்வதேச போதை கடத்தும் கும்பலில் இவர் காண்ட்ராக்ட் முறையில் பணியில் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும், ஒவ்வொரு முறை கடத்தி வரும்போதும் இவருக்கு கணிசமான அளவு ஊதியம் கிடைக்கும். இந்த முறை இந்த போதை பொருளை அடிஸ் அபாபாவிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்து, சென்னையில் இருந்து ரயில் மூலம் மும்பை சென்று போதைப் பொருளில் பாதி அளவில் மும்பையில் உள்ள போதை கடத்தும் கும்பலிடம் ஒப்படைத்து விட்டு, மீதி பாதி போதை பொருளை மும்பையில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்கு எடுத்து சென்று டெல்லியில் உள்ள போதை பொருள் கடத்தும் கும்பலிடம் ஒப்படைக்க இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து என்சிபி அதிகாரிகள் மும்பை, டெல்லி மாநகரில் உள்ள என்சிபி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, தென் ஆப்பிரிக்க ஆசாமியிடம் இருந்து மும்பை, டெல்லியில் போதை பொருளை வாங்க இருந்த சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பை டெல்லிக்கு கொண்டு செல்ல வேண்டிய போதைப்பொருள் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வந்தது ஏன் என்றும் என்சிபி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:தாய்லாந்தில் இருந்து பறந்து வந்த 402 பச்சோந்திகள்.. சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்! - THAILAND FLIGHT CHAMELEONS SEIZED

ABOUT THE AUTHOR

...view details