தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எய்ட்ஸ் இருப்பது தெரியாமலே வாழும் 12,000 பேர்.. தமிழக சுகாதாரத்துறை அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாட்டில் எச்ஐவி தொற்றுடன் 1,32,383 பேர் கூட்டு சிகிச்சை பெறுவதாகவும், நோய் இருப்பது தெரியாமலே 9 சதவீதம் பேர் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 7:14 PM IST

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்டு, கையெழுத்து பிரச்சார இயக்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 10 கல்லூரிகளில் புதிதாக செஞ்சுருள் சங்கங்களை துவக்கி எச்.ஐ.வி, எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு எச்ஐவி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பள்ளி விவரங்களின் படி, இந்தியாவில் மிஷோராம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் 1 சதவிகிதத்திற்கும் மேலாக எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் எச்.ஐ.வி., /எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த மக்கள் தொகையில் 0.16 சதவிகிதமாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் 104 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியான தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் வரை நடத்தப்பட்டு வருகிறது. எச்.ஐ.வி , எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று தொடர்பான விழிப்புணர்வு அனைத்து பிரிவினருக்கும் ஏற்படுத்தப்படுகிறது.

எச்.ஐ.வி தொற்றுள்ள நபர் பயன்படுத்திய ஊசியை மற்றொருவர் பயன்படுத்துவதாலும், பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பு மற்றும் பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தை ஏற்றுவதாலும் எச்.ஐ.வி தொற்று ஏற்படலாம். எச்.ஐ.வி தொற்றுள்ள தாய் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பொழுது குழந்தைக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

  • இந்தியாவை பொறுத்த அளவில் எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் நபர்கள் 16,80,083 உள்ளனர்.
  • தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றால் 1,32,383 நபர்கள் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழ்நாட்டில் 2010-ல் 0.38 சதவீதமாக எச்ஐவி தொற்று பாதிக்கப்பட்டோர் விகிதம் இருந்தது.
  • மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் 2023-ஆம் ஆண்டு எச்.ஐ.வி தொற்று 0.16 சதவீதமாக குறைந்துள்ளது.
  • 15 முதல் 49 வயதுக்குட்பட்ட நபர்களிடையே எச்.ஐ.வி, எய்ட்ஸ் பரவலின் மதிப்பீடு 2010-ஆம் ஆண்டு 0.35 சதவிகிதமாக இருந்தது 0.20 சதவிகிதமாக 2023-ல் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் எச்.ஐ.வி தொற்றுள்ள நபர்களில் 91 சதவீதம் நபர்கள் தன் நிலையை அறிந்துள்ளனர். இந்திய அளவில் 81 சதவீதம் மட்டுமே தன் நிலையை அறிந்துள்ளனர். தமிழ்நாட்டில் அனைத்து சிறைச்சாலைகளிலும் எச்.ஐ.வி, எய்ட்ஸ் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தொற்றுள்ள நபர்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தமிழ்நாடு எச்ஐவி/எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details