தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்டால் ஓகே.. கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசு திட்டவட்டம்! - shobha karandlaje controversy - SHOBHA KARANDLAJE CONTROVERSY

shobha karandlaje controversy speech on Cafe Blast: கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 8:05 PM IST

சென்னை: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்புக் கோரினால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்புக் கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக கூறினார். தனது பேச்சுக்கு பேசியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். தமிழ் மக்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன். இனி இப்படி பேசமாட்டேன் என ஷோபா தெரிவிக்க வேண்டுமெனவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஷோபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செய்தியாளர் சந்திப்புக்கு பதில் மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு ஒரு கருத்து தெரிவித்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்புக் கோரினால் தான் சரியாக இருக்கும் என தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அதற்குள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்புக் கோரி அதனை நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:"பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி நிச்சயம் வெண்கலம் வெல்லும்" - முன்னாள் கேப்டன் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details