சென்னை:2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை தயாரிப்பு தொடர்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தலைமைச்செயலகத்தில் 2-வது நாளாக இன்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்றைய தினம் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வி துறை, மருத்துவம் ஆகிய துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாளாக பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் ஆலோசனை நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு, ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இந்து சமய அறநிலைய துறை, சுற்றுச்சூழல், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அந்த துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோருடன் நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் மார்ச் 14-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கருத்துகளை கேட்டறியப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, மூர்த்தி, நாசர், மெய்யநாதன், மதிவேந்தன், ராஜேந்திரன்,கீதா ஜீவன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், வணிகர் சங்க நிர்வாகிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் அமைப்பினர், உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகள் எடுத்து கூறினர். அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதைய ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் பல்வேறு முக்கிய புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.