தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலக்குழி மரணங்களில் தமிழ்நாடு முன்னிலை.. மாநில அளவில் தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வலியுறுத்தல்! - NATIONAL SAFAI COMMISSION MEETING

NATIONAL SAFAI COMMISSION MEETING: தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை நலனை கருதி மாநில அளவிலான தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்திய தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் இந்திய அளவில் தமிழகத்தில் மலக்கழிவு குழி உயிரிழப்பு சதவீதம் அதிகமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 8:08 PM IST

தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் தலைவர் வெங்கடேசன்
தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் தலைவர் வெங்கடேசன் (CREDIT -ETV Bharat Tamil Nadu)

ஈரோடு:தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மாவட்டம் வாரியாக தூய்மைப் பணியாளர் நலன் குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் மரப்பாலம் பகுதியில் தூய்மைப் பணியாளர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து தேசிய தலைவர் வெங்கடேசன் ஆய்வு நடத்தி, தூய்மைப் பணியாளர் குடும்பத்தினரிடம் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் தலைவர் வெங்கடேசன் பேட்டி (CREDIT -ETV Bharat Tamil Nadu)

இதனைத் தொடந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், தூய்மைப் பணியாளர் சங்கங்கள் மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், ஈரோடு மாவட்டத்தில் நகராட்சியில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்கள் ஊதியம் குறைவாக உள்ளதாக வைத்துள்ள புகாருக்கு தேவையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தல் செய்யபட்டுள்ளதாக கூறினார்.

மேலும், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் சார்பில் தமிழக அரசுக்கு இரண்டு கோரிக்கைகள் முன் வைப்பதாகவும், அதில் தமிழகத்தில் மாநில அளவிலான தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும். இந்தியாவில் 11 மாநிலத்தில் மாநில அளவிலான தூய்மைப் பணியாளர் ஆணையம் உள்ளது. இதனால் தூய்மைப் பணியாளர் நலன் கருதி தமிழகத்தில் தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவில் மனித மலக்கழிவு குழியில் இறங்கி சுத்தம் செய்யும் போது மனித உயிரிழப்பு சதவீதம் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. 1993-2024ஆம் ஆண்டு வரை 257 பேர் உயிரிழந்துள்ளனர். கல்வியறிவு முன்னேற்றம் அடைந்த போதிலும், மலக்கழிவு குழியில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது வருத்தம் அளிக்கக்கூடியதாக உள்ளது.

இதற்கு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதே போன்று அடுக்குமாடி குடியிருப்பு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும். இதற்காக உள்ள இலவச தொலைபேசி எண்ணான 14420 என்ற எண்ணை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை வேலை அமர்த்தும் பணி முறையை ஒழிக்க வேண்டும்.

ஒப்பந்த முறையில் வேலை செய்யும் எல்லா இடத்திலும் பிரச்சினை உள்ளது. தொழிலாளர்களுக்கு முழுமையாக ஊதியம் கிடைப்பதில்லை, காப்பீடு,பிஎஃப் போன்ற எந்த வசதிகள் செய்து தரப்படவில்லை. தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் ஊதியம் என்னவென்று தெளிவாக இல்லை.

மாவட்டம் வாரியாக ஊதியம் வேறுபடுகிறது. மாவட்ட ஆட்சியர் பரிந்துரைப்படியும் ஊதியம் வழங்குவதில்லை. தூய்மைப் பணியாளர் அறக்கட்டளை மூலம் தூய்மை ஒப்பந்தம் பணிகளை அரசு வழங்க பரிசீலனை செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு தொழில் கடனாக மத்திய அரசு 20 லட்சம் ரூபாய் வழங்குகிறது. மத்திய அரசு தூய்மைப் பணியாளர்களுக்கான கடன் வழங்கும் சலுகைகள் குறித்து சிறப்பு முகாம் நடத்த மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: “கிளைச் செயலாளர் அளவில் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி ” - கே.சி.பழனிசாமி தாக்கு! - K C Palanisamy

ABOUT THE AUTHOR

...view details