தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வில்லுப்பாட்டு கலையை அடுத்த தலைமுறைக்கு சுமந்து செல்லும் அண்ணன், தங்கை.. தெற்கில் இருந்து ஒலிக்கும் கிராமிய இசை! - VILLU PATTU SATHYAVALLI

TENKASI VILLU PATTU: நாகரிக வளர்ச்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக, தமிழகத்தின் கிராமிய கலையான வில்லுப்பாட்டு அழிவின் விளிப்பை நோக்கிச் செல்லும் வேளையில், நமது கலையை நாம் காப்பாற்றாமல் யார் காப்பது என வில்லுப்பாட்டு கலையை அடுத்த தலைமுறைக்கு சுமந்து செல்லும் தென்காசியை சேர்ந்த இளம் கலைஞர்கள் பற்றி விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 6:16 PM IST

தென்காசி வில்லுப்பாட்டு கலைஞர்கள்
தென்காசி வில்லுப்பாட்டு கலைஞர்கள் (Credit -ETV Bharat TamilNadu)

திருநெல்வேலி:தென்தமிழ்நாட்டில் பிரசித்திப்பெற்ற கிராமியக் கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டு, தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் முக்கிய கலையாக இருந்து வருகிறது. குறிப்பாக மதுரைக்கு தெற்கே, கோயில் திருவிழாக்களில் வில்லிசைப் பாட்டு தலைசிறந்த பக்தி நிகழ்ச்சியாக இருக்கிறது. கடவுளைப் போற்றிப் பாடும் இந்த வில்லிசைப்பாட்டிற்கு மயங்காத சாமிகளே இல்லை என்று கூறலாம்.

தென்காசி வில்லுப்பாட்டு கலைஞர்கள் (Video Credit - ETV Bharat Tamilnadu)

ஆடாத சாமிகளையும் கூட ஆடவைக்கும் வில்லிசை கலைக்கு, கிராமங்களில் அவ்வளவு முக்கியத்துவம் உண்டு. கோயில் திருவிழா என்றாலே காப்பு கட்டுவதில் தொடங்கி பந்தல் போட்டு நையாண்டி மேளம் வில்லுப்பாட்டு என கிராமிய இசை முழங்க உற்சாகத்தோடு கொண்டாடப்படும். ஆனால், காலப்போக்கில் கோயில் திருவிழாக்களில் பாட்டு கச்சேரி, செண்டை மேளம் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் போன்ற இசை நிகழ்ச்சிகளின் வரவால் கிராமியக் கலையான வில்லுப்பாட்டுக்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறது.

அழிவின் பாதையில் வில்லுப்பாட்டு:புதிதாக வில்லுப்பாட்டு கலையை கற்றுக்கொள்ள பெரியளவில் யாரும் ஆர்வம் காட்டாததே இதற்கு முக்கிய காரணம் என சொல்லலாம். இதனால் அழிவின் விளிம்பில் இருக்கும் வில்லிசைக்கு உயிர் கொடுக்கும் விதமாக தற்போது இளம் பெண்கள் இளைஞர்கள் வில்லுப்பாட்டு கலையை பாட தொடங்கியுள்ளனர். அதன்படி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவி என்ற இளம்பெண் (19) தனது 14 வயதில் வில்லுப்பாட்டு மீது ஏற்பட்ட அதீத காதல் காரணமாக அதை முறையாக கற்று வில்லுப்பாட்டு கலையில் கோலோச்சி வருகிறார்.

இந்த நிலையில் மாதவியை தொடர்ந்து அதே தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கருவந்தா என்ற கிராமத்தை சேர்ந்த அண்ணன் தங்கை இருவர் வில்லுப்பாட்டு கலையில் அசத்தி வருகின்றனர். கருவந்தா பொதிகாச்சலம் உமா தம்பதிக்கு சத்யவள்ளி (18) மாரிச்செல்வி என்ற இரு மகள்களும், ஐயப்ப செல்வின் (22) என்ற மகனும் உள்ளனர். பொதிகாச்சலம் கடந்த 30 ஆண்டுகளாக வில்லுப்பாட்டு பாடி வரும் நிலையில் அவரது இளைய மகளான சத்யவள்ளி மற்றும் மகன் ஐயப்ப செல்வினை வில்லுப்பாட்டு பாட செல்லும்போது அடிக்கடி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

கைகொடுக்கும் இளம் தலைமுறை: இதனால் இருவருக்கும் சிறு வயதிலையே வில்லுப்பாட்டு மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. 15 வயதில் வில்லுப்பாட வேண்டும் என சத்யவள்ளி தனது ஆசையை தந்தையிடம் கூற, படிப்பு பாதிக்கும் என்பதால் முதலில் அதற்கு தடை போட்ட பொதிகாச்சலம் பின்னாளில் தனது மகளின் ஆசைக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதையடுத்து சத்யவள்ளி ஐயப்ப செல்வின் இருவரும் முதலில் வில்லுப்பாட்டில் பக்க வாத்தியங்களான தாளம் அடித்தல், பானை அடித்தல் போன்ற பணியில் ஈடுபட்டு தனது தந்தை அருகில் அமர்ந்து அவர் பாடுவதை ஆழமாக கவனித்துள்ளனர்.

ஐயப்ப செல்வின் குடம் அடித்தலில் ஆர்வம் ஏற்பட்டதால் அதை முறைப்படி கற்று தேர்ந்தார். ஆனால் சத்யவள்ளிக்கு வில்லுப்பாட்டு அன்னாவி ஆக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்துள்ளது. வில்லுப்பாட்டில் முன்னணியில் பாடுபவர்களை தான் அன்னாவி என்பார்கள். அவருக்கு அருகில் அமர்ந்து பாடுபவர் பக்கப்பாட்டு கலைஞர் என்பர். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது 16 வயதில் சத்யவள்ளி பக்கப்பாட்டு கலைஞராக உருவெடுத்தார்.

அப்போது அவர் பதினொன்றாம் வகுப்பு படித்தார். அதேசமயம் படிப்பையும் விடவில்லை. தற்போது சத்தயவள்ளி கல்லூரி முதலாமாண்டு படித்து வரும் நிலையில் இரண்டு ஆண்டுகளாக பக்கப்பாட்டு பாடி தென் மாவட்ட மக்கள் மத்தியில் வில்லுப்பாட்டில் கலக்கி வருகிறார். "தந்தனந் தானின தந்தானே தன தான தானின தந்தானே" என தனது மெல்லிய குரலால் உற்சாகமோடு பாடுவதால் வில்லுப்பாட்டு கலையை விரும்பாத இந்த காலத்து இளைஞர்கள் பெண்களும் கூட சத்யவள்ளியின் வில்லுப்பாட்டுக்கு ரசிகர்களாக மாறியுள்ளனர்.

பொதுவாக திருவிழாக்களில் வில்லுப்பாட்டு என்றாலே அந்த காலத்து பெரியவர்கள் மூதாட்டிகள் தான் அதிகம் ரசித்து கேட்பார்கள் ஆனால் மிக இளம் வயதில் மாதவி (19) சத்யவள்ளி (18) போன்றோர் வில்லுப்பாட்டு கலையில் களம் இறங்கி இருப்பதால் தற்போது மீண்டும் தென் மாவட்டங்களில் வில்லுபாட்டு கலைக்கு மீண்டும் மவுசு கூடியுள்ளது. குறிப்பாக, சத்தியவள்ளி வில்லுப்பாட்டு பாடத் தொடங்கிய பிறகு அவரது குழுவினருக்கு நெல்லை, தென்காசி மட்டுமல்லாமல் தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை போன்ற வெளி மாவட்டங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சத்தியவள்ளி வில்லுபாட்டை சமூக வலைதளம் மூலம் கேட்டு தெரிந்து அவரது குழுவினரை வில்லுப்பாட அழைக்கின்றனர். அதன்படி தற்போது சத்தியவள்ளி வில்லிசை குழுவினர் மதுரையை தாண்டி கோயமுத்தூர், திண்டுக்கல், திருச்சி போன்ற மாவட்டங்களிலும் வில்லுப்பாட்டு பாடி வருகின்றனர். சத்தயள்ளி கல்லூரி படித்து கொண்டே தேவைப்படும்போது விடுமுறை எடுத்து வில்லுப்பாட செல்கிறார். அதேபோல் ஐயப்ப செல்வின் இந்தாண்டு தான் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

பாதுகாக்கப்படும் பாரம்பரியம்: "அழியும் நிலையில் உள்ள வில்லுப்பாட்டு கலையை அடுத்த தலைமுறைக்கு சுமந்து கொண்டு செல்ல வேண்டும் விரைவில் 'அன்னாவி' ஆக வேண்டும் என்பதுதான் தனது பெரும் லட்சியம்" என இளம் வில்லுபாட்டு கலைஞரான சத்தியவள்ளி நம்மிடம் பெருமையோடு தெரிவிக்கிறார்.

மேலும், வில்லுப்பாட்டு என்பது கோயில் திருவிழாக்களில் இதயமும் துடிப்பும் போன்று முக்கியத்துவம் வாய்ந்தது. வில்லுப்பாட்டு இல்லாமல் திருவிழாக்கள் நடைபெறாது அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வில்லுப்பாட்டை தான் பாடுவது பெருமையாக உள்ளது" என்று சத்யவள்ளி தெரிவித்துள்ளார்.

அதேபோல், "தற்போது இளைஞர்கள் எல்லோரும் படித்துவிட்டு கைநிறைய சம்பளத்தோடு வேலைக்கு செல்ல வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அதேசமயம் இதுபோன்ற கிராமிய கலைகளை காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. எனவே வில்லுப்பாட்டு கலையை காப்பாற்ற நான் முன்வந்துள்ளேன். மக்களின் ரசனை தான் எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது" என கூறுகிறார் ஐயப்ப செல்வின்.

இதையும் படிங்க: வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பெண் அதிகாரி.. நெல்லையில் குழந்தை திருமணத்தை தடுப்பதில் முன்னெடுப்பு! - Child Marriage awareness VILLUPATTU

ABOUT THE AUTHOR

...view details