தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் சோகம்: 4 பேர் மரணம்; 230-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! - chennai air show 2024

சென்னை விமான சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களில் 230-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்த நிலையில், முதியவர் உள்பட 4 பேர் உயிரிழந்தது அனைவரின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னை ஏர் ஷோ, மயக்கமடைந்தவர்கள் மீட்பு
சென்னை ஏர் ஷோ, மயக்கமடைந்தவர்கள் மீட்பு (Credits - mk stalin x page, ETV Bharat Tamil Nadu)

சென்னை :இந்திய விமானப்படை நிறுவப்பட்ட தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் இந்திய விமானப்படை தளங்களில் விமானப்படை தினம் கொண்டாடப்படும் நிலையில், இன்று சென்னை மெரினாவில் விமான வான் சாகசக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், மக்களுக்கான அடிப்படை தேவைகளில் தொய்வு ஏற்பட்டு, 230க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் 4 பேர் மரணம் அடைந்த செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியைக் காண சென்னை மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் மெரினா கடற்கரைக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக. சென்னையில் இன்று காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை லட்சக்கணக்கானோர் காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை விமான சாகசத்தை கண்டு ரசித்தனர்.

விமான சாகசம் முடிந்த பிறகு ஒரே நேரத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் வெளியேறியதால் சாலைகளில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அண்ணா சாலையில் இருந்து காமராஜர் சாலை வரை ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

மயக்கமடைந்தவர்களை மீட்ட காட்சிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

காமராஜர் சாலையில் மக்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறினர். பல்வேறு வழிகளிலும், சந்துகளிலும் நுழைந்து பொதுமக்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர். அதுமட்டுமின்றி சாலையில் சரியான போக்குவரத்து வசதிகளை செய்து தராமல் விட்டதன் காரணமாக பல கி.மீ தூரத்திற்கு மக்கள் நடந்தே ரயில் நிலையங்களுக்கும், மெட்ரோ நிலையங்களுக்கும் சென்றனர்

குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் நடக்க முடியாமல் சாலையில் அமர்ந்து சிறிது நேரம் கழித்து சென்றனர். விமான சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்த பிறகும், மாலை 5.00 மணி வரையில் பொதுமக்கள் கூட்ட நெரிசலால் சாலை நிரம்பி வழிந்தது.

இந்நிலையில் இந்த சாகச நிகழ்ச்சியைக் காண வந்த பொதுமக்கள் போதுமான அடிப்படை தேவைகளின்றி தவித்தனர். மேலும் 40க்கும் மேற்பட்ட மக்கள் நீர்ச்சத்து குறைபாட்டால் மயங்கி விழுந்தனர். மயக்கமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஒமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என மருத்துவமனை முதல்வர் அரவிந்த் தெரிவித்தார்.

அரசு மீது விமர்சனம்: இந்நிலையில் இந்நிகழ்ச்சியைக் காண வந்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான்(56) என்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் கார்த்திகேயன், சீனிவாசன், தினேஷ்குமார் ஆகிய மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேரம் செல்ல செல்ல ராயப்பேட்டை ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் 230-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்களுக்கு கழிப்பறை வசதிகளும், போதுமான அளவிற்கு குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தர வில்லை. சரியான போக்குவரத்து வசதிகள் செய்து தராததாலும், போலீசார் போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்தி தராததால் கடும் நெரிசலில் மக்கள் சிக்கி தவித்தனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்: இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில், "சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி இந்திய ராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்ஸ்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும், 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன" என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details