ஈரோடு:கோவை மாவட்டம், சிறுமுகை ஜடையம்பாளையத்தில் கொசு வலை வியாபாரம் செய்து வந்தவர், அப்பகுதியைச் சேர்ந்த முருகன். இவர் தனது மனைவி ரஞ்சிதா (30), மகன் அபிஷேக் (8), மற்றும் மகள் நித்திஷா (7) ஆகியோருடன் நேற்றிரவு காரில் கரூர் சென்றுவிட்டு இன்று (மே 1) அதிகாலை சிறுமுகை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்களின் கார், நெசவாளர் காலனி என்ற இடத்தில் அவ்வழியாக வந்த முருகன் கார் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குடும்பத்தோடு முருகன் வந்த கார் அப்பளம் போல நொறுங்கியது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முருகன், அவரது மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக் ஆகியோர் பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த முருகனின் மகள் நித்திஷாவை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.