தமிழ்நாடு

tamil nadu

"சவுக்கு சங்கருக்கு கை எலும்பில் இரண்டு இடங்களில் விரிசல்" - வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்! - Savukku Shankar Case

Savukku Shankar Case: சவுக்கு சங்கருக்கு கையில் இரண்டு இடங்களில் எலும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 9:20 PM IST

Published : May 9, 2024, 9:20 PM IST

சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி
சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: பெண் காவலர்கள் உள்படத் தமிழ்நாடு காவல்துறையினர் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியதாக சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் மீது சிறைத்துறை போலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் அவரை மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்த அனுமதி வேண்டும் எனவும் அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார். இதையடுத்து சவுக்கு சங்கரின் மருத்துவச் சிகிச்சைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.

சவுக்கு சங்கரின் மருத்துவச் சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (மே.09) போலிசார் பலத்த பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் மீண்டும் கோவை மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலிஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, இன்று (மே.09) கோவை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டதற்கு, சிகிச்சை அளிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தோம். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி, அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் கையில் 2 இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது கையில் மாவு கட்டுப் போடப்பட்டுள்ளது என்றார்.

மேலும், சிகிச்சைக்குப் பின்பு மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்துள்ளதாகச் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இப்போது சிறையில் தாக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. மாநகர சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுப்பதாக மனு அளித்திருந்த நிலையில், தற்போது பின் வாங்கியுள்ளனர். வருகிற திங்கட்கிழமை கட்டு மாற்ற மீண்டும் அரசு மருத்துவமனைக்குச் சவுக்கு சங்கரை அழைத்து வர வேண்டும்.

மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் மனுவிற்காகத் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டதாக சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. போராடி இந்த சிகிச்சை பெறப்பட்டுள்ளது.

தேனியில் அதிகாலை 1.30 மணிக்கு சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். ஆனால், காலை 8 மணிக்கு மேல் தான் கஞ்சா வைத்திருந்தாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. மிகவும் மெனக்கெட்டு கஞ்சா வழக்கு போலீசார் போட்டுள்ளனர். ஆனால், கஞ்சா வழக்கு பொய் வழக்கு என நிரூபிக்க முடியும் என சவுக்கு சங்கர் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்களை அவர் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:காதை பிளந்த சத்தம்.. சிதறிய உடல்கள்.. 9 பேரை பலி கொண்ட சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன? - Sivakasi Cracker Factory Explosion

ABOUT THE AUTHOR

...view details